Skip to main content

மினி டெம்போ கவிழ்ந்து விபத்து... 23 பெண்கள் படுகாயம். 

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு ஊராட்சியில், அதே ஊர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட பெண்கள் வடக்கு பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மாலை வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்ல சுமார் 3 கி.மீ நடக்க தொடங்கிய போது, அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்திய ஊராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களை ஏற்றி அனுப்பியுள்ளனர்.


மேற்பனைக்காடு கிழக்கு பகுதிக்கு அருகே வயல் பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது மற்றொரு வாகனத்திற்கு வழி விட முயன்ற போது பெண்களை ஏற்றிச் சென்ற மினி டெம்போ வயல் பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெண்களின் கதறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து அனைவரையும் மீட்டனர். அதில் 30- க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
 

pudukkottai mini tempo incident womens admit at govt hospitals


மேலும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் 9 பெண்களை ஏற்றி அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மற்றவர்களை அப்பகுதியில் நின்றவர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்றி மேற்பனைக்காடு அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், ஆம்புலன்ஸ் திரும்பி வர தாமதம் ஆகும் என்பதால் காயமடைந்திருந்த மேலும் 14 பெண்களை பயணிகள் வேன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஷாஜகானின் காரில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமைனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இருப்பினும் சந்திரா, மலர், மாலதி, தேவிகா, ஞானசுந்தரி, தெய்வானை உள்ளிட்ட 6 பேரை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்து ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்த கீரமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் வாகனத்தை மீட்டனர். இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.