ADVERTISEMENT

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட காப்பீட்டு அடையாள அட்டைகள்! உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல்!!!

07:10 PM May 01, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏழை மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படக் கூடாது என்பதற்காக மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை கடந்த தி.மு.க ஆட்சியில் தொடங்கி தற்போதைய அ.தி.மு.க ஆட்சி வரை தொடர்கிறது. காப்பீட்டு அடையாள அட்டை இருந்தால் சிகிச்சை செலவுகளை அரசு செலுத்திவிடுகிறது. இந்த திட்டத்தை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர். ஆனால் பல கிராமங்களில் இந்த அடையாள அட்டை கிடைக்காமல் கடன் வாங்கி, சொத்து வித்து சிகிச்சை பெற்றுள்ளனர். பலர் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துவிட்டனர் என்பது வேதனையாகவும் உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊரட்சியில் உள்ளது ஆண்டவராயபுரம் கிராமம். அந்த கிராமத்தில் அணவயல் கிராமத்தை தேர்ந்த அமிர்தமாஜ் என்பவரின் தோட்டத்தில் பல வருடங்களுக்கு பிறகு நேற்று உழவு செய்யும் போது மண்ணுக்குள் இருந்து விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வெளிவரத் தொடங்கியது. தகவல் அறிந்து அப்பகுதியில் இளைஞர்கள் பலரும் கூடிநின்று அப்பகுதியை தோண்டிப் பார்த்த போது அந்தப் பகுதி மக்களின் காப்பீட்டு அட்டைகள் புதைக்கப்பட்டிருந்தது. இது குறித்து உடனடியாக வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனா்.

அடுத்த நாள் ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி, கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்ட விரிவான காப்பீட்டு அட்டைகளை சேகரித்ததுடன் அப்பகு பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் எழுதி வாங்கிக் கொண்டனர்.



அப்போது அங்கு வந்த ஒரு பெண், எனக்கு போன வருசம் இதய அறுவை சிகிச்சை செய்யும்போது காப்பீட்டு அட்டை கேட்டார்கள். நாங்களும் கேட்டுப்பார்த்தோம் கிடைக்கவில்லை. அதனால் ரூ. 4.5 லட்சம் கடன் வாங்கி பணம் கட்டி ஆபரேசன் செஞ்சு வந்திருக்கிறேன். இப்ப மறுபடியும் வரச் சொன்னாங்க போக வழியில்லை. அதனால் போகல. ஆனால் இந்த மண்ணில் புதைக்கப்பட்ட அட்டைகளில் எனது அட்டையும் உள்ளது. இந்த அட்டை இருந்திருந்தால் என் சிகிச்சை செலவு குறைந்திருக்கும் கடன் வாங்கி இருக்கமாட்டோம். தினக் கூலி வேலை செய்து கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவிக்கிறோம். அதனால் எனக்கு காப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஏழை பெண் குடும்பத்துடன் கண்ணீரோடு தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தார்.


அதேபோல அப்பகுதி இளைஞர்கள் கூறும்போது, இதே போல பலர் காப்பீட்டு அட்டை இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கடனாளியாகி உள்ளனர். சிலர் சிகிச்சை செய்ய வழியில்லாமல் இறந்தும் உள்ளனர். ஆனால் எங்கள் பகுதியில் உள்ள அத்தனை பேரின் காப்பீட்டு அடையாள அட்டையும் இப்படி மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட இடம் முன்பு தைலமரக் காடாக இருந்ததால் அந்த காட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அது இப்போது தைலமரக்காடு அழித்து விவசாயம் செய்யும்போது புதையல் போல வெளி வருகிறது. இந்த செயலை செய்த நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

யாரோ ஊராட்சி நிர்வாகத்தில் பணியாற்றியவரோ, வருவாய் துறையில் பணியாற்றியவரோதான் இப்படியான ஈனச் செயலை செய்திருக்கிறார். அவர்களை பற்றிய தகவல் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் ஏனோ நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT