Skip to main content

தகர கொட்டகையில் வகுப்பறை, மழையில் நனையும் புத்தகங்கள்; அரசுப்பள்ளியில் அவலம்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Pudukkottai government school students suffer due to lack of building

 

அரசு பள்ளிக்கு வகுப்பறைகளே இல்லாமல் 4 ஆண்டுகளாக தகரக் கொட்டகையில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதும், மழைக்கு புத்தகப் பைகளுடன் ஓரமாக ஒதுங்கி  நிற்பதும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு கிராமத்தில் கடந்த 2002, 2003 ம் ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு ஒரு கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த போது, திருநாளூர் தெற்கு, வடக்கு, குளமங்கலம், ஆவணத்தான்கோட்டை, சிட்டங்காடு, கரிசக்காடு போன்ற பல கிராமங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் படிக்க வந்தனர்.

 

2017, 2018 காலங்களில் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக பழுதாகி படிக்கட்டுகள் உடைந்து கொட்டியதால் இடியும் நிலையில் உள்ள கட்டடத்தை நம்பி எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று பெற்றோர்கள் சொன்னதால் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள் வகுப்பறை கட்டடம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை உறுதி செய்து இனிமேல் இந்த வகுப்பறைகளை பயன்படுத்தக் கூடாது என்று 2019 ம் ஆண்டு பூட்டி சீல் வைத்தனர்.

 

Pudukkottai government school students suffer due to lack of building

 

வகுப்பறை கட்டடம் பூட்டி சீல் வைக்கும் முன்பு புதிய கட்டடம் கட்டும் வரை வகுப்புகள் நடத்த தற்காலிமாக அரை சுவருடன் தகர சீட்டுகள் அமைத்து தற்காலிக வகுப்பறை தகரக் கொட்டகை அமைத்து கொடுத்தனர். அந்த கொட்டகையும் கஜா புயலில் சேதமடைந்து மராமத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பழுதான பயன்படுத்த முடியாத பூட்டி சீல் வைத்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்படவில்லை.

 

தற்போது 6 முதல் 10 ம் வகுப்பு வரை 205 மாணவ, மாணவிகளும் தகரக் கொட்டகையில் அமர்ந்து படித்து வரும் நிலையில் மழை பெய்தால் மழைத்தண்ணீர் வகுப்பறைகளுக்குள் வந்து விடுவதால் மாணவர்கள் புத்தகப் பைகளை தூக்கி வைத்துக் கொண்டு மழை நிற்கும் வரை ஓரங்களில் நிற்க வேண்டியுள்ளது. மேலும், சைக்கிள் நிறுத்த பொதுமக்கள் அமைத்துக் கொடுத்த தகரக் கொட்டகையிலும் மழையில் நனையாமல் நின்று வருகின்றனர். இனிமேல் வடகிழக்கு பருவமழை காலத்தில் மாணவர்கள் எப்படி மாணவர்கள் அமர்ந்து படிப்பார்களோ தெரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

 

Pudukkottai government school students suffer due to lack of building

 

இது குறித்து உள்ளூர் இளைஞர்கள் கூறும் போது, “எங்கள் ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் வந்து படிக்கிறார்கள். மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த விண்ணப்பித்துள்ளோம். விரைவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயரப் போகிறது. ஆனால் ஒரு கட்டடம் கூட இல்லை தகரக் கொட்டகையில் தான் நடக்கிறது என்பது தான் வேதனை. கடந்த 5 வருசமா நாங்க கொடுக்காத மனுக்கள் இல்லை. ஆனால் எந்தப் பயனும் இல்லை. இப்ப மழை தொடங்கிடுச்சு மழைத் தண்ணீர் வகுப்பறைகளுக்குள் புகுந்து மாணவ, மாணவிகள் நிற்பதைப் பார்க்க முடியல.

 

பல ஊர்களில் கட்டடம் இருந்தாலும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுறாங்க ஆனால் எங்க ஊர்ல ஒரு கட்டடம் கூட இல்லை கட்டித்தாங்கனு கேட்டாலும் கிடைக்கல. அதனால் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். ஒவ்வொரு மாணவராக வெளியே போனால் பிறகு பள்ளிக்கூடத்தையே மூட வேண்டி வரும். அதனால் மாணவர்களை இங்கேயே விடுங்கள் என்று கெஞ்சி தங்க வைத்திருக்கிறோம். அதிகாரிகளிடம் போய் கேட்டால் புலி வருது கதையா இந்த வருசம் கட்டடம் வரும், வரும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். மழை பெய்ததும் தங்கள் குழந்தைகளை அழைக்க வந்த ஒரு அம்மா தன் சேலையால் குழந்தைகள் நனையாமல் பாதுகாப்பதைப் பாருங்கள். இதன் பிறகாவது மனமிறங்கட்டும்.

 

Pudukkottai government school students suffer due to lack of building

 

இனிமேலாவது எங்கள் ஊர் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் வரும் என்று நம்புறோம். உடனே அதற்கான உத்தரவாதம் கிடைக்கலன்னா மாணவர்களை சீருடையோட அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போய் ஆட்சியரிடம் முறையிட காத்திருக்கிறோம்”  என்றனர். 

 

கடந்த ஆண்டு டெல்லிக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசுப் பள்ளிகளைப் பார்த்து இது போல தமிழ்நாடு அரசுப் பள்ளிகளையும் அதி நவீன பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்றார். இப்படி உயர்ந்த கட்டடம், பளபளக்கும் பளிங்குத்தரை, ஏசி, இணையத்துடன் கூடிய கணினி, ஸ்மார்ட் போர்டு, ஒயிட் போர்டு என அனைத்தையும் அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே முதலமைச்சரின் ஆசை. அப்படி ஒரு ஆசையில் பிறந்தது தான் ஏழை மாணவர்களின் சத்துக்குறைபாடுகளைப் போக்கும் காலை உணவுத் திட்டம். இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மழலையர் வகுப்புகளுக்கும், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வரையும் விரிவாக்கம் செய்ய கேட்டு வருகின்றனர்.

 

முதலமைச்சரின் கனவு அரசுப்பள்ளிகளின் அதிநவீன வசதியாக இருக்கும் பட்சத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகளே இல்லாமல் 4 ஆண்டுகளாக தகரக் கொட்டகையில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதும், மழைக்கு புத்தகப் பைகளுடன் ஓரமாக ஒதுங்கி நிற்பதும் வேதனை அளிக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.