Skip to main content

உச்சக்கட்ட மோதலில் புதுக்கோட்டை திமுக; கலைஞர் பிறந்தநாளில் நடக்கும் அவலம்!

Published on 03/06/2025 | Edited on 03/06/2025

 

Pudukkottai DMK in the throes of a clash

புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து தி.மு.க வில் நாளுக்கு நாள் முட்டல்  மோதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாநகரப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜேஷை மாற்ற வேண்டும் என்று கட்சித் தலைமை வரை நிர்வாகிகள் புகார் கொண்டு போயும் கூட நடவடிக்கை இல்லை. இதனால் மாநகரப் பொறுப்பாளர் ராஜேஷ் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் இன்று கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் திரண்டிருந்தனர். மா.செ கள் ரகுபதி, செல்லப்பாண்டியன் ஆகியோர் வந்து கொடி ஏற்றி கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் கட்சி அலுவலகம் முன்பு மாநகரப் பொறுப்பாளர் எதிர்ப்பு அணியைச் சேர்ந்தவர் வைத்துள்ள பதாகை திமுக வில் சலசலப்பையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. 

Pudukkottai DMK in the throes of a clash

அந்தப் பதாகையில் "மாநகரத் திமுக போராடும்! மாநகரத் திமுக வெல்லும்!!"  "பரிதவிப்போர் இங்கே! பரிந்துரைத்தவர் எங்கே!!" என்ற வாசகங்களுடன் மாநகர நிர்வாகிகளின் குழு படத்துடன் அந்தப் பதாகை உள்ளது. கட்சி அலுவலகம் வந்த கவிதைப்பித்தன் இந்தப் பதாகையைப் பார்த்து "கட்சியாய்யா நடத்துறீங்க" என்று கோபமாக பேசிவிட்டு நேராக சென்று கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துச் சென்றார்.

Pudukkottai DMK in the throes of a clash

தொடர்ந்து மா.செ க்கள் வந்து கொடி ஏற்ற வேண்டும் என்று காத்திருந்த நிலையில் அங்கு வந்த மாநகரப் பொறுப்பாளர் ராஜேஷ் பதாகையைப் பார்த்தவர் நேராக திமுக கொடிக் கம்பத்திற்குச் சென்று கட்சிக் கொடியை ஏற்றிச் சென்றார். மாவட்ட அலுவலகத்தில் மா.செ க்கள் ஏற்ற வேண்டிய கட்சிக் கொடியை மா செ க்கள் இல்லாமல் மாநகரப் பொறுப்பாளர் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை திமுகவில் உட்சகட்ட உள்கட்சி மோதல் வளர்ந்து கொண்டே போகிறது என்பதற்கு இன்று கலைஞர் பிறந்த நாள் சம்பவமும் சாட்சி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சார்ந்த செய்திகள்