புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. இவர் திமுக தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் ஆவார். இவரது மனைவி சாந்தி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர். இவர்களது மகன் வெங்கட்திருமாறன் (வயது 30). இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இத்தகைய சூழலில் தான் வெங்கட்திருமாறனின் மனைவி பொற்கொடி கீரமங்கலத்தில் நடத்தும் மருத்துவமனையில் இருந்து கணவன் மனைவி இருவரும் தனித்தனித் காரில் இன்று (03.07.2025) மாலை கொத்தமங்கலம் நோக்கிச் சென்ற போது கீரமங்கலம் வடக்கு நகரம் சன்னதியில் கார் திரும்பும் போது அங்குத் தயாராக 2 நம்பர் இல்லாத பைக்களில் மாஸ்க் அணிந்து காத்திருந்த 4 பேர் வெங்கட் திருமாறன் சென்ற காரை மட்டும் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கார் கண்ணாடிகளில் வெட்டுப்பட்ட நிலையில் காருக்குள் இருந்த வெங்கட்திருமாறனுக்கு கை மற்றும் முதுகு பகுதியிலும் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் காரை வேகமாகப் பின்பக்கமாக எடுத்ததால் அரிவாளோடு நின்ற மர்ம நபர்கள் தயாராக நின்ற பைக்குகளில் ஏறி ஆவணம் ரோட்டில் சென்றுவிட்டனர். 

இந்த தாக்குதலில் காயமடைந்த வெங்கட்திருமாறனை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.இந்த சம்பவம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில் வெங்கட் திருமாறன் உறவினர்கள் கீரமங்கலம் காவல் நிலையத்தில் திரண்டு காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கீரமங்கலம் போலிசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டாலும் நீண்ட நேரம் காவல் நிலையம் முன்பு காத்திருந்தனர்.