Skip to main content

குடிநீரில் மனிதக்கழிவுகளை கலந்த விவகாரம்; குற்றவாளியை நெருங்கிய போலீசார்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

Pudukkottai district vengaivayal water tank incident 

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் உள்ள ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த மாதம் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது, குழந்தைகளின் ஒவ்வாமைக்கு குடிநீரில் கிருமி கலந்துள்ளதா என ஆய்வு செய்யுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

 

டிசம்பர் 25ந் தேதி பட்டியலின மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த தண்ணீர் கலங்கலாக உள்ளதாக அப்பகுதி பெண்கள் கூறியுள்ளனர். இதனால் அங்கு இருந்தவர்கள் உடனடியாக மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி பார்த்த போது தொட்டியில் இருந்த குடிநீரில் மனிதக் கழிவு மிதந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த விசிக நிர்வாகிகள், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் வந்து பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். மேலும், சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தமிழ்நாடு அரசு கவனத்திற்கும் கொண்டு சென்றார். அதே நேரத்தில் அன்னவாசல் ஒன்றிய அதிகாரிகள், வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

 

இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மறுநாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது பட்டியலின மக்கள் தங்கள் கிராமத்தில் தீண்டாமை உள்ளதாக கூறினார்கள். உடனே அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு அவர்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததோடு அருகில் உள்ள டீ கடையில் ஆய்வு செய்து அங்கிருந்த குவளைகளை கைப்பற்றி டீ கடைக்காரரை கைது செய்தனர்.

 

மறுநாள் அமைச்சர் மெய்யநாதன் சமத்துவ வழிபாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, மாற்று குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். குடிநீரில் மனிதக் கழிவு கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

 

சிறப்பு புலனாய்வு குழுவினர் முதற்கட்டமாக சுமார் 70 பேரிடம் விசாரணை செய்த பிறகு 7 பேருக்கு சம்மன் கொடுத்து வெள்ளனூர் காவல் நிலையம் அழைத்து நீண்ட நேரம் விசாரணை செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நாளில் அந்தப் பகுதியில் சுற்றிய இளைஞர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு தொழில்நுட்ப புலனாய்வு குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த குழுக்களின் புலனாய்வில் குறிப்பிட்ட நபரிடம் வந்து நிற்கிறது. அந்த நபர் பற்றிய விவரங்களை வெளியிட போலீசார் தயாராகும் நிலையில் பல்வேறு நிலைகளில் இருந்தும் தடைகள் வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் யார் அந்த நபர் என்பதை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே விசாரணை நடப்பதாகவும் ஒரு தலைபட்சமாக விசாரணை இருப்பதாகவும், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். "பொதுமக்களின் குடிநீரில் மனிதக் கழிவுகளை கலந்து மாவட்டத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் கவிவர்மன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.