Skip to main content

காலங்காலமாய் சிற்பங்களை பொக்கிஷமாய் காவல் காக்கும் கிராமத்தினர்!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

pudukkottai district temple security work for the peoples

 

காலங்கள் மாற மாற கலாச்சாரங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பல இடங்களில் மரபுகளை மாற்ற முடியாது என்று வாழையடி வாழையாக சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அப்படி ஒரு மரபு மாறாத நிகழ்வு குடுமியான்மலையில் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மேற்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது குடுமியான்மலை. தொடக்கத்தில் குன்றியூர், திருநக்குன்று என்றும் இருந்த ஊர் பிறகு குடுமியான்மலையானது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அகிலாண்டேஸ்வரி உடனுறை சிகாகிரீஸ்வரர் கோயில் உள்ளது. முற்காலப் பாண்டியர்களால் அவர்களுக்கே உரித்தான சதுர வடிவ ஆவுடையுடன் பிரமாண்ட லிங்கத்தை மலையில் குடைந்து அமைத்திருக்கிறார்கள். பிறகு வந்த முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர் மருமகள் (முத்தரையர் மகள்), குலோத்துங்கன், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை வானர்கள், வானதிரையர்கள், நாயக்கர்கள், தொண்டைமான்கள் எனப் பலரும் திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகளும் உள்ளது. தொண்டைமான் மன்னர்கள் முடிசூடும் இடமாகவும் இது இருந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், இசை மண்டபம் எனப் பல கலைப் பொக்கிஷங்கள் உள்ளன.

 

pudukkottai district temple security work for the peoples

 

பிற்காலத்தில் படையெடுப்பில் அழகிய சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. மலையின் அடியில் குடைவரைக் கோயிலை ஒட்டி மலையிலேயே விநாயகர் சிற்பம் பொறிக்கப்பட்டு, அதன் அருகில் இசை மொழி (கிரந்தம்) கல்வெட்டுகளும் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த தளத்திற்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகையோ மிகக் குறைவாகவே உள்ளது.

 

இத்தனை சிறப்பு மிக்க கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க உருவம்பட்டி, காட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர். ஒரு நாளைக்கு 12 பேர் வீதம் இரவு பகலாக மெய்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இவர்களுக்கு விவசாய நிலம் கொடுத்திருக்கிறார்கள். பிறகு மாதம் ரூ.100 சம்பளம் தான். பல வருடங்களாக இது தான் சம்பளம்.

 

pudukkottai district temple security work for the peoples

 

இது குறித்து காவல் பணியிலிருந்தவர்கள் கூறும் போது, "எங்கள் முன்னோர்கள் பாதுகாத்த இந்த பொக்கிஷங்களை இப்போது நாங்கள் காவல் காக்கிறோம். எங்களுக்கு பிறகு எங்கள் பிள்ளைகள் காவல் பணி செய்வார்கள். இரவில் 12 பேரும் கம்புகளோடு கோயில் முழுவதும் ஆங்காங்கே பணியில் இருப்போம். பகலில் நிர்வாகிகள் இருவர் பணி செய்வார்கள். எந்த வேலை என்றாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு காவல் பணிக்கு வந்துவிடுவோம். 

 

pudukkottai district temple security work for the peoples

 

ஆனால், இத்தனை பொக்கிஷங்களையும் காலங்காலமாய் பாதுகாக்கும் எங்களுக்கு பல வருடமாக ரூபாய் 100 தான்  சம்பளம். ஒரு நாள் செலவுக்குக் கூட பற்றாத சம்பளம் தான். ஆனால் கடவுள் பணி நமக்கு கிடைத்திருப்பதாக நினைத்து காவல் பணி செய்கிறோம். இனி மேலாவது எங்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.