Skip to main content

"ரஜினி படங்களைப் பார்க்க திரையரங்குகளில் ரசிகர்களைவிட மூட்டைப்பூச்சிகளே அதிகமாக உள்ளது"- முத்தரசன் பேட்டி!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும். தமிழக மாணவர்கள் 200 அங்கே சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.
 

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்தப் போவதாக வெளியான செய்தி அபாயகரமானது. முப்படை தளபதி அரசியல் பேசிய பரபரப்பே அடங்காத நிலையில், இப்போது ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்துவது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

pudukkottai district keeramangalam theatre cpi party mutharasan speech

தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதனால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்த பிரிவுகக்கான தேர்வாக இருந்தாலும் முறைகேடு நடப்பதால் இளைஞர்கள் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். இந்த சம்பவத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் முழுமையாக செயல்படுவது தெரிகிறது. அரசியல்வாதியின் பின்னால் தான் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக மக்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
 

நெடுவாசலில் 2017ல் ஹைட்ரோகார்பன் போராட்டம் தொடங்கியது. அப்போது வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசல் பிரதிநிதிகளை டெல்லி வரை அழைத்து சென்று மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்புவதற்கு முன்பு இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது மத்திய அரசு.  


தற்போது சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை மக்கள் கருத்து தேவை இல்லை என்று அறிவிப்பு செய்துள்ளது. இதனால் டெல்டாவில் போராட்டங்கள் தொடங்கியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்து வருகிறார். பொது அறிவிப்பு செய்து அதற்கான காரணங்களை சொல்லவேண்டும் மௌனம் காத்து தப்ப முயலக்கூடாது.
 

ஜனவரி 26ந் தேதி நடந்த முடிந்த கிராமசபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் வேண்டாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் மதிப்பு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம்.
 

தந்தை பெரியார் இல்லை என்றால் நடிகர் ரஜினி இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது என்பதை உணரவில்லை. இரட்டைவேடம் போட்டு மோடியை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளில் ரசிகர்களை விட மூட்டைப்பூச்சிகளே அதிகமாக இருப்பதாக தெரியவருகிறது. 


தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதை செய்ய வேண்டியது மாநில அரசுதான். ஆனால் அரசாங்கம் தவறி வருகிறது எடப்பாடி பேச மறுக்கிறார். அவர்கள் கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானம் போட்டிருக்கிறது பாஜக தவிர மற்ற அனைவரும் தமிழில் குடமுழுக்கு என்பதை  ஆதரிக்கிறார்கள். தமிழில் மட்டுமே குடமுழுக்கு செய்ய வேண்டும். தமிழ்நாட்டு சாமிகளுக்கு தமிழில் சொல்வது தான் புரியும். அதனால் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.


தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடத்துவது எப்போது என்பது தெரியாது. இரண்டு பழனிச்சாமிகளுக்கு மட்டும்தான் தெரியும். ஒன்று முதலமைச்சர் பழனிசாமி மற்றொன்று தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இருவருக்கு மட்டும்தான் தெரியும். சேலத்தில் ஒரு ஒன்றியத்தில் தலித் உறுப்பினரே ஒன்றிய சேர்மனாக வர முடியும் என்ற நிலையில் அங்கே 2 திமுக உறுப்பினர்கள் தலித்துக்கள் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் நாளில் மற்ற யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஒரு தலித் ஒன்றிய பெருந்தலைவராக வருவதை முதலமைச்சர் விரும்பவில்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்." இவ்வாறு முத்தரசன் கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.