Skip to main content

பேருந்தில் பணத்தைத் தவறவிட்ட பெண்... ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துநர்!

Published on 15/09/2021 | Edited on 16/09/2021

 

 

pudukkottai district keeramangalam government hospital women money mission


சிகிச்சைக்காக மகளை அழைத்து மருத்துவமனைக்குப் பேருந்தில் சென்ற பெண் தவறவிட்ட பணத்தைப் பேருந்து திரும்பி வரும் போது ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனரைப் பயணிகள் பாராட்டினார்கள்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்கு மருத்துவம் பார்க்கப் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்குச் செல்ல கொத்தமங்கலத்திலிருந்து 17- ம் நம்பர் நகரப் பேருந்தில் ஏறி கீரமங்கலத்தில் இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சில கி.மீ. சென்ற நிலையில் டிக்கெட் எடுக்கப் பணத்தைத் தேடிய போது பணம் மற்றும் மருந்துச்சீட்டு இருந்த மணிப்பர்சை காணவில்லை. அழுதுகொண்டே நடுவழியில் நகரம் சன்னதி சாலையில் இறங்கி நின்றனர். அவர்களது அழுகையைப் பார்த்து அந்த வழியாகச் சென்ற நகரம் லெனின் அவர்களிடம் விசாரித்து வழிச் செலவுக்குப் பணம் கொடுத்துச் சென்றுள்ளார்.

 

சிறிது நேரத்தில் தனது கணவருக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட்டு கீரமங்கலம் பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்து அழுது கொண்டிருந்த போது அறந்தாங்கி சென்ற 17-ம் நம்பர் நகரப் பேருந்து திரும்பி வந்தது. பேருந்து ஓட்டுநர் கொத்தமங்கலம் ஜெயராஜிடம் சென்று மணிப்பர்ஸ் கிடந்ததா என்று கேட்க அருகில் நின்ற நடத்துனர்  மணிப்பர்சில் என்ன இருந்தது என்று கேட்க ரூபாய் 4,200 பணம் மற்றும் மகளுக்கு மருத்துவம் பார்த்த மருந்து சீட்டு இருந்ததாகக் கூற அதைச் சரிபார்த்த நடத்துநர் அந்த மணிப்பர்சை உரியவரிடம் கொடுத்தார். பணத்தை கொடுத்த ஓட்டுநர், நடத்துன்ருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய அந்தப் பெண் மகளை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். இந்த சம்பவத்தைப் பார்த்த சக பயணிகளும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் செயலைப் பார்த்து பாராட்டினார்கள்.

 

இது குறித்து நடத்துனர் கூறும் போது, "அந்த தாயும், மகளும் கொத்தமங்கலத்தில் ஏறி கீரமங்கலத்தில் இறங்கினார்கள். நிறையப் பயணிகள் இறங்கிப் போன பிறகு பேருந்தில் ஏறிய குளமங்கலம் மூதாட்டி இந்த மணிப்பர்சை எடுத்து யாருடையது என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதை வாங்கி வைத்திருந்தோம். இப்ப மணிப்பர்சை தொலைத்தவர்களே கண்ணீரோடு வந்து கேட்ட போது அதற்குள் என்ன இருந்தது என்பதை உறுதி செய்து கொண்டு உரியவரிடமே ஒப்படைத்தோம். அவர்களும் சந்தோசமாக மகளைச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். தொலைத்தவர்களிடமே பணத்தைத் திருப்பி கொடுத்தது எங்களுக்கும் நிம்மதியாக உள்ளது" என்றார்.


நாணயமாக அரசு பேருந்து ஊழியர்களை நாமும் பாராட்டுவோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.