Skip to main content

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமன உத்தரவுக்கு எதிரான வழக்கு! -பட்டியலிட உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவு!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறி, மனுவை விசாரணைக்குப் பட்டியலிட, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 மே மாதம் முதல் காலியாக இருந்த புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை நியமிக்க  புதுச்சேரி அமைச்சரவை கடந்த ஆண்டு முடிவு செய்து, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது. ஆனால், மாநில தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய, துணைநிலை ஆளுநர் தேர்வுக்குழுவை நியமித்தார். அதுபோல, மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டார். அதைப் புதுச்சேரி சட்டமன்றம் நிராகரித்தது.

 

highcourt


இதற்கிடையில், பாலகிருஷ்ணன், கடந்த ஆண்டு ஜூலை மாதம்  மாநில தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில்,  மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்று தேர்வு செய்யவேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது முன்னாள் ஆலோசகர் தேவநீதிதாஸை, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கும் வகையில், தகுதி நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் உத்தரவையும், துணைநிலை ஆளுநரின் உத்தரவையும் சட்டவிரோதமானது, செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, அமைச்சர் நமசிவாயத்தின் மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனக் கூறி, மனுவை விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.