71-ஆவது குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி, உப்பளம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மையமாகவும் இந்தியா திகழ்கிறது. புதுச்சேரி மாநிலம் நடைமுறை நிர்வாகக் காரணங்களால் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்றி வருகிறது.
புதுச்சேரியில் முதல் முறையாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் பசுமை சூழலை மேம்படுத்த இதுவரை 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பாடவாரியான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
வயிற்றுப்போக்கால் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த 5-ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு சுற்றுலாப்பயணிகளின் வரத்து கடந்த ஆண்டு 8% அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டிகுள்ளும் இருந்து வருகிறது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனங்கள் மூலம் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டார்.
விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் என்.ஆர்.பாலன், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.