Skip to main content

போலி நகையை அடகுவைக்க முயன்ற முதியவர்; முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் திட்டம் அம்பலம்?

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

pudhukottai old man cheated fake gold

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் - மேற்பனைக்காடு சாலையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்திற்கு, வெள்ளிக்கிழமை மாலை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, விவேகானந்தா நகரில் வசிக்கும் கீரமங்கலம் மேற்பனைக்காடு ரோடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருஞானம் (51 வயது) சுமார் 50 கிராம் மதிப்புள்ள நெக்லஸ் நகையை அடகு வைக்க வந்துள்ளார்.

 

நகையை வாங்கிய நிதி நிறுவன ஊழியர் தரத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோது அது போலி நகை என்பது தெரியவந்தது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள இதே நிதிநிறுவனக் கிளையில் கடந்த மாதம் 19ஆம் தேதி ரூ.1 லட்சத்தி 52 ஆயிரத்திற்கு, இதே நபர் போலி நகையை அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளதாக நிதிநிறுவன இணையம் காட்டியுள்ளது. அதனால் அந்த நபரை பிடித்து வைத்துக் கொண்டு கீரமங்கலம் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
 

மேலும், போலி நகையை அடகு வைத்துப் பணம் வாங்க வந்த நபரிடம் நடத்திய விசாரனையில், இந்த நகைகளை தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் கார்த்திக் கொடுத்து, அடகு வைக்கச் சொன்னதாகவும், நகையை அடகு வைத்துக் கொடுத்தால், ரூ.2 ஆயிரம் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். போலி நகை என்பதை நிதி நிறுவன ஊழியர்கள் கண்டறிந்ததால், உடனே பணத்தை திருப்பிச் செலுத்தி போலி நகைகளை மீட்டுக் கொள்வதாகச் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதாவது சனிக்கிழமை மாலைக்குள் பணத்தை திருப்பிச் செலுத்திவிடுவதாகக் கூறியுள்ளனர்.



ஆனால், இந்தக் கும்பல் தொடர்ந்து போலி நகைகளைத் தயாரித்து தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்கள், தனியார் நகை அடகுக் கடைகளில் அடகு வைத்துப் பணமோசடி செய்து வருவதாகக் கூறுகின்றனர், விபரம் அறிந்தவர்கள். மேலும், போலி நகை தயாரிக்கும் போது, வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில் உள்ள நகை மதிப்பீட்டாளர்கள் தரம் பார்க்க எந்த இடத்தில் உரசிப் பார்ப்பார்களோ, அந்த இடத்தில் மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது, திட்டமிட்டே ஒரு கும்பல் போலி நகைகளைத் தயாரித்து, வெளியூர்களில் சென்று, அடகு வைத்துப் பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இவர்களை போலீசார் கைது செய்து முறையாக விசாரித்தால், எங்கெல்லாம் போலி நகைகளைக் கொடுத்து மோசடி செய்துள்ளார்கள் என்பது அம்பலமாகும். ஆனால், காவல் நிலையம் செல்லாமல் இருக்க, உடனே பணத்தை திருப்பிக் கொடுத்துச் சமாளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து முழு விசாரனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிறார்கள் பொது மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மது போதையில் ஞாயிறுகளில் நடக்கும் கொலைகள்; அதிர்ச்சியில் மக்கள்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

  young man was passed away in drunkenness
ஆறுமுகம் - அருள் 

 

கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் அருள் (45). சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நூற்றுக்கணக்கான கார்களுடன் பிரபலமான மாப்பிள்ளை டிராவல்ஸ் வைத்து  நடத்தியவர். ஏதோ சில காரணங்களால் சொந்த ஊருக்கு வந்து கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை(1.10.2023) இரவு தனது உறவினரும் நண்பருமான அதே ஊரைச் சேர்ந்த செல்வம் மகன் ஆறுமுகத்துடன் கீரமங்கலம் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் ஆறுமுகம் ஒரு கத்தியால் அருளை சில இடங்களில் குத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற அருளின் பின்னாலே சென்ற ஆறுமுகம் கழுத்து, தலை, முதுகு என 9 இடங்களில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அருள் அங்கேயே சரிந்தார். 

 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருளை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்ப தயாரானபோது சிகிச்சை பலனின்றி அருள் உயிரிழந்தார்.  இதனையடுத்து நேற்று அருளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் அருளை கொலை செய்த ஆறுமுகத்தை பொதுமக்களே பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகராற்றில் ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்த்தனர். 

 

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கீரமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் கட்டட வேலை செய்து வந்த அய்யாச்சாமி மகன் முருகன்(30), மற்றும் அவரது ஊரை சேர்ந்த முருகனின் உறவினர்களான தன்னக்குட்டி மகன் தனசேகரன்(29), தன்னக்குட்டி மகன் தங்கச்சாமி(53) உட்பட 5 பேர் கீரமங்கலம் அண்ணாநகர் கட்டிட ஒப்பந்தக்காரரான லெட்சுமணனிடம் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

 

இவர்கள் மேற்பனைக்காடு கிராமத்தில் கட்டடம் கட்டும் இடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்த நிலையில் ஏப்ரம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முருகன் தனசேகரன், தங்கச்சாமி ஆகியோர் கீரமங்கலம் வந்து மது குடித்துவிட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த போது, முருகனுக்கும் தனசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அப்போது வாக்குவாதம் முற்றி தனசேகரன் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து முருகன் மண்டையில் பலமாக தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் கீழே சாய்ந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியில் நின்றவர்கள் தனசேகரனை பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

அதே போல கடந்த ஆண்டு மே மாதம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் அருள்(38). கீரமங்கலம் சந்தைப் பேட்டை பகுதியில் இரவு நேர உணவு விடுதி நடத்தி வருகிறார். இரவு கடை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்ற போது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நடுவழியில் நின்றுள்ளது. தனது நண்பரை பெட்ரோல் வாங்கி வரச் சொல்லிவிட்டு நின்ற போது அருகில் உள்ள வீட்டில் நின்ற நாய் குறைத்ததால் அருள் நாயை தாக்கியதாக கூறப்படுகிறது. 

 

 young man was passed away in drunkenness

 

இதைப் பார்த்த நாயின் உரிமையாளருக்கும் அருளுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அருள் அங்கிருந்து மீண்டும் கீரமங்கலம் நோக்கி சென்ற போது வேம்பங்குடி மேற்கு அண்ணாத்துரை மகன் தினேஷ் (30), கீரமங்கலம் தர்மர் கோயில் தெரு அண்ணாத்துரை மகன் மதன் (எ) சுரேஷ்குமார் (22) ஆகியோர் அருளை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருள் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்ற நிலையில் மயக்கமடைந்து வாந்தி எடுத்ததால் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

கீரமங்கலத்தில் கடந்த சில மாதங்களில் டாஸ்மாக் கடைகள் அருகே, கடைவீதிகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் மது போதையில் அடுத்தடுத்து 3 கொலைகள் அதுவும் உறவினர்களை உறவினர்களே கொன்ற சம்பவம் தொடர்ந்து அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

குலதெய்வம் கோவிலுக்கு வந்த குடும்பம்; குளத்தில் பறிபோன 3 உயிர்கள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

A family who came to the clan deity temple for prayers; 3 lives were passed away in temple itself

 

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களது மகள்களான அக்க்ஷயா(15), தனலெட்சுமி (12) மற்றும் உறவினர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்து விடுதி கிராமத்தில் அமைந்துள்ள தங்கள் குலதெய்வமான மயிலியாத்தம்மன் கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வந்துள்ளனர். இவர்களுடன் விஜயகாந்தின் தம்பி ஆனந்தகுமார் (29)  வந்துள்ளார்.

 

விஜயகாந்த்தின் குடும்பத்தினர் திங்கள் கிழமை மதியம் பள்ளத்திவிடுதி வந்து சேர்ந்தனர். இந்நிலையில் பயணக் களைப்பு தீர அதே கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் குளத்தில் குளிப்பதற்காக அக்க்ஷயா மற்றும் அவரது தங்கை தனலெட்சுமி அவர்களது சித்தப்பா ஆனந்தகுமார் ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.

 

குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது தனலட்சுமி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற அக்க்ஷயாவும் ஆனந்தகுமாரும் முயன்றுள்ளனர். அதற்குள் தனலெட்சுமி ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். தனலட்சுமியை காப்பாற்ற இவர்களும் அங்கே சென்ற போது எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். நெடு நேரத்திற்கு பின் மூவரையும் மீட்டு அப்பகுதி மக்கள் அவர்களை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இதன்பின் மூவர் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோடை காலங்களில் குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் இது போன்ற துயரச் சம்பவ தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். தங்களின் வேண்டுதல் நிறைவேற குலதெய்வத்தை வழிபட தொலை தூரத்தில் இருந்து வந்தவர்களுக்கு நடந்த துயர சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.