Skip to main content

நடராஜர் கோவில் கனகசபையில் மீண்டும் பொதுமக்கள்; உற்சாகத்துடன் வழிபாடு!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

public Worship with enthusiasm in Natarajar Temple Kanakasabai again

 

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து கடந்த 5 மாதத்திற்கு முன் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தநேரத்தில் கோவிலில் எப்போதும் போல கனக சபையில் ஏறி வழிபடச் சென்ற பட்டியல் சமூகப் பெண் ஜெயசீலா என்பவரை தீட்சிதர்கள் வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர்.

 

இது மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீட்சிதர்களின் செயல்பாட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், சிவனடியார்கள் உள்ளிட்ட  பொதுமக்கள், பக்தர்கள் ஆதிகாலம் முதல் கனகசபையில் ஏறி வழிபட்டது போல் அனுமதிக்க வேண்டும் எனக் கோவில் வாயிலில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

 

இதன் விளைவாக (மே-19) அன்று தமிழக அரசு கனகசபை மீது ஏறி அனைத்து தரப்பு மக்களும் வழிபடலாம் என அரசாணை வெளியிட்டது.  இதற்கு பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி அரசாணை குறித்து விபரம் அளிக்கக் கோவில் தீட்சிதர்களுக்கு அழைப்பு விடுத்ததின் பேரில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையில் அரசாணையை அமல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தீட்சிதர்கள் தரப்பில் அரசாணை போடுவதற்கு முன் எங்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. கோவிலில் அரசாணையை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும். தற்போது கனக சபையில் வெள்ளி பூஜை பொருட்கள் உள்ளது. எனவே தீட்சிதர்களைத் தவிர யாரையும் அனுமதிக்க முடியாது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. அப்போது கூடுதல் ஆட்சியர் அரசாணை வெளியிட்ட நேரத்தில் இருந்து அது அமலுக்கு வந்து விட்டது. எனவே அனைவரும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட தீட்சிதர்கள் சிலர், அரசு அதிகாரிகளை உடல் மொழி செய்கையால் கேலி செய்தனர். இதற்கு சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் சம்பந்தப்பட்ட தீட்சிதரை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஹரிதாஸ், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

 

கோவிலில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், பொதுமக்கள்,  வழிபாடு செய்ய வந்தபோது வெளியேற்றப்பட்ட பட்டியல் சமூகப் பெண் ஜெயசீலா, தெய்வ தமிழர் பேரவையினர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் நடராஜர் கோவில் கனகசபையில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.