The public who petitioned the Collector's Office

Advertisment

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 23ந் தேதி திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ சந்தோஷிணி சந்திரா தலைமையில் நடந்தது. அதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்து மனுக்களை அவரிடம் வழங்கினார்கள். அப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம் வருந்தியா பாளையம் பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

பிறகு அவர்கள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 2 வருந்திய பாளையத்தில் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 ஊர்களிலிருந்து கழிவுநீர் கொண்டுவந்து வருந்திய பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாக தெரியவந்துள்ளது. மேற்படி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தில் வருந்தியபாளையம், புதூர், ரோட்டூர், ராமநாதபுரம் மற்றும் முனியப்பன் சுவாமி கோவில் ஆகிய ஊர்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கும், புதைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் மேற்கண்ட ஊர் பொதுமக்கள் சுடுகாடு இன்றி மிகவும் பாதிக்கப்படுவார்கள். குடிநீர் தேவைகளும் பாதிக்கப்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் கழிவுநீர் மூலம் சுமார் 150 ஏக்கர் மஞ்சள் கரும்பு நெல் வாழை முதலிய பயிர்கள் மாசடைந்து எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்தப் பகுதியில் கழிவுநீர் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்றனர்.

அதேபோல் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள அண்ணாநகர் புது காலனி பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து டி.ஆர்.ஓ. விடம் மனு கொடுத்தனர். அவர்கள் கூறும்போது, "நாங்கள் மேற்கண்ட முகவரியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். தமிழக அரசின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. நாங்கள் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் இங்கு தான் வசித்து வருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு உள்ளது. ஆனால் எங்கள் பகுதி மக்களுக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீர் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றார்கள்.

Advertisment

இதேபோல் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர், முத்து கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அவர்கள்,நாங்கள் மேற்கண்ட இடத்தில் 30 குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். அரசு புறம்போக்கு நிலத்தில் எங்க ஊரைச் சேர்ந்த மூதாதையர்கள் பல வருடங்களாக சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் தனியார் சிலர் சுடுகாட்டில் உள்ள பல பகுதிகளில் மணலை அள்ளினார்கள். இது குறித்து எங்க ஊர் பொதுமக்கள் கேட்டபோது இது எங்கள் பட்டா நிலத்தில் உள்ளது உங்களுக்கு சுடுகாடு கிடையாது என்று அவர்கள் திட்டினார்கள். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு சுடுகாட்டை அளவீடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதேபோல் எங்க ஊருக்கு சாலை வசதியும் இல்லை. நாங்கள் இதுவரை ஓடை பள்ளத்து ஓரமாக புறம்போக்கு வண்டிப் பாதையை பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த வண்டி பாதையையும் ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே வண்டி பாதைனய ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். என்றார்கள்.