Skip to main content

கண்டுகொள்ளாத அதிகாரிகள்! களத்தில் இறங்கிய மக்கள்

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Public who make road between river

 

அரியலூர் - கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களையும் இணைத்து ஓடுகிறது வெள்ளாறு. இரு மாவட்டங்களிலும் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும், பணிக்கு சென்று வருபவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் இந்த ஆற்றை கடந்து சென்றுவரவேண்டியுள்ளது. மழைக்காலங்களில் இவர்கள் வெள்ளாற்றைக் கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

 

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இரு மாவட்ட எல்லையில் உள்ள ஓட்டைக்காடு - சௌந்தர சோழபுரம் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே மேம்பாலம் கட்டுவதற்காக சுமார் ரூ. 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. பாலத்தின் பணிகளை துவக்க கோரி திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுநல இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இதையடுத்து பாலம் கட்டுமான பணி துவக்கப்பட்டு கடந்த 2021 ஜனவரி மாதம் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இருபுறமும் இணைப்பு சாலை பணிகள் முடிக்கப்படாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

 

இது குறித்து பல்வேறு புகார்கள் மனுக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலம் முடிந்ததும் ஆற்றின் குறுக்கே பாலத்தை ஒட்டிய பகுதியில் பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் மண் சாலை அமைத்து போக்குவரத்திற்கு பயண்படுத்திவந்தனர். ஆனால், அந்த மண் பாலமும் ஆற்று வெள்ளத்தில் அவ்வபொழுது அடித்து செல்லப்படும். இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிவந்தனர்.

 

இந்நிலையில், தற்போது போடப்பட்ட மண் சாலை சமீபத்தில் பெய்த மழையினால் இரண்டு முறை உடைப்பெடுத்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. சமீபத்தில் கூட நமது நக்கீரன் இதழில் இந்த பாலத்தின் இணைப்பு சாலை போடாததால் மக்கள் படும் சிரமங்கள் குறித்து இரண்டு பக்க செய்தி கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதன் பிறகும் அரசு அதிகாரிகள் எந்த முனைப்பும் காட்டாமல் உள்ளனர். 

 

இந்த நிலையில், ஆலத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமச்சந்திரன், துணைத் தலைவர் சிவசங்கரி, நல்லதம்பி மற்றும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு மேம்பாலத்தின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் அளவிற்கு கிராவல் மண்ணை கொட்டி இணைப்பு சாலைபணியை தற்காலிகமாக செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.