Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

Public protest in front of the District Collector's Office entrance!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13/12/2021) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அவரிடம் வழங்கினார்கள். மொடக்குறிச்சி அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மாவட்ட அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். 

 

அதைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது, "எங்கள் கனகபுரம் கிராமத்தில் கனகபுரம், ஜீவா நகர், காங்கயம்பாளையம், கொண்டவநாய்க்கன்பாளையம், சேடர்பாளையம், சிஎஸ்ஐகாலனி, குல்பட் என அப்பகுதியில் 1500- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களில் பெரும்பாலும் விவசாய கூலிவேலை செய்து வருபவர்கள் தான். எங்களுக்கு பிறப்பு இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா, மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டி கனகபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம்  விண்ணப்பிக்கும்போது அவர் சான்றிதழ் வாங்காமல் நாட் கணக்கில் எங்களை அலைக்கழிக்கிறார். 

 

மேலும் சான்றிதழ் வழங்குவதற்கு ரூபாய் 500 முதல் 5000 வரை லஞ்சம் கேட்கிறார். இதில் வசதி படைத்த சிலர் பணம் கொடுத்து சான்றிதழ் பெற்று விடுகின்றனர். ஆனால் தினக் கூலியான எங்களைப் போன்ற மக்கள் பணம் கொடுத்து வாங்க முடியவில்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் சிலர் முதியோர் உதவித் தொகைக்காக விண்ணப்பித்த போது பெரும்பாலான மனுக்கள் தகுதி இல்லை என்று அவரே நிராகரித்து விடுகிறார். அவருக்கு உடந்தையாக அவரது உதவியாளரும் செயல்பட்டு வருகிறார். எனவே கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுத்து  பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் விரைவாக  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றனர்.

 

முன்னதாக கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இங்கே கோஷம் போட கூடாது என்றும்  உங்களில் முக்கியமான ஒரு சிலர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுங்கள் என்றனர். 

 

அதனை ஏற்று சிலர்மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்தனர். அதிகாரியின் ஊழலுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தால்  கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.