ADVERTISEMENT

“பொது விடுமுறை அளிக்க வேண்டும்” - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

08:24 PM Jan 21, 2024 | prabukumar@nak…

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளை (22.01.2024) பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்க தமிழக அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்துக்கள் வணங்கும் தெய்வமான ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (22-01-2024) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-01-2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT