Skip to main content

பள்ளி வயதில் குடும்ப பாரம் சுமக்கும் சிறுமியின் தாய்க்கு மனநல ஆலோசனைகள்... ஆட்சியர் உத்தரவில் மருத்துவர் வழங்கினார்!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

Psychiatric counseling for the mother of a school age girl carrying a family burden ..

 

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தில் மனநலம் பாதித்த தாயோடு மண் குடிசையில் வசிக்கும் பள்ளிச் சிறுமி சத்தியா குடும்ப பாரத்தைப் போக்க விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வந்தார். மன தைரியத்தோடு குடும்ப பாரம் சுமக்கும் சிறுமியின் நிலை, அவரது படிப்பு மற்றும் வீடு போன்றவற்றிற்கு அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இந்த செய்தியை முதன் முதலில் செப்டம்பர் 3 ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோவாக வெளியிட்டோம்.

செய்தி வெளியான நிலையில் சிறுமிக்காக உதவ பல நல் உள்ளங்கள் முன்வந்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 4 ஆம் தேதி காலை ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் சத்தியா வீட்டிற்குச் சென்று வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் சிறுமியை நேரில் சந்தித்து 'உனக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று தைரியம் கொடுத்து பல உதவிகளையும் செய்தார். அந்த உதவிப் பொருட்களை கூட வைக்க இடமின்றி மழைக்கு ஒழுகும் மண் குடிசையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மக்கள் பாதை அமைப்பினர் தொடர்ந்து சத்தியா குடும்பத்திற்கான உதவிகளை செய்து வரும் நிலையில், இன்று 5 ந் தேதி சத்தியாவின் தாய்க்கு மாற்றுத்திறனாளி சான்று வாங்குவதற்காக கந்தர்வகோட்டை அழைத்துச் சென்று சான்று பெற்றனர்.

 

Psychiatric counseling for the mother of a school age girl carrying a family burden ..


இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் சத்தியாவின் வீட்டிற்குச் சென்று அவரது தாயிடம் நீண்ட நேரம் பேசி ஆலோசனைகள் வழங்கினார். அதோடு, அவரது ஆழ்மன துயரங்களை வெளிக்கொண்டு வந்து சகஜ நிலைக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். தொடரந்து அவருக்குத் தேவையான ஆலோசனைகளும் மருந்துவ உதவிகளும் தேவைப்படுகிறது. அதனால் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

மேலும் சத்தியாவிடம் மன தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேறு எந்தப் பிரச்சனைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தனை மாறியதால் தான் 10 ஆம் வகுப்பை விட 12 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்துள்ளது என்று பல்வேறு உளவியல் ஆலோசனைகள் வழங்கினார்.

 

Ad


தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சத்தியா குடும்பத்தின் மீது தனிக்கவணம் செலுத்தி அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதைப் பார்த்து கண்கலங்க சத்தியா மற்றும் உறவினர்கள் நன்றி கூறினார்கள்.

சிறுமி சத்தியா கூறும்போது.. என்னையும், என் குடும்பம் பற்றியும் அறிந்து, ஒழுகும் குடிசையில் வாழ்வதைப் பார்த்து 'மக்கள் பாதை' அமைப்பினர் உதவிகள் செய்தனர். தொடர்ந்து நக்கீரன் போன்ற ஊடகம் என் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியதால் இன்று உலகம் எங்கும் உறவுகள் கிடைத்திருக்கிறார்கள். அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை நாங்கள் இருக்கிறோம் என்பது தான். அதைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து ஒரு தாத்தா பேசும் போது அழுதுகொண்டே பேசினார் நானும் அழுதுவிட்டேன். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன் என்று அந்த தாத்தா சொன்னது ரொம்ப ஆறுதலாக இருந்தது. பலரும் ஆறுதலாகப் பேசியதே எனக்கு நிம்மதியும், பலத்தையும் கொடுத்திருக்கிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.