மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடக்கும் இடங்களில் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி, தேர்தல் நடைபெறும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்கவும், தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆளுங்கட்சியினர் கவுன்சிலர்களைக் கடத்த முயற்சிப்பதாகவும், அதிகாரிகளை மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாளை நடைபெற உள்ள தேர்தலுக்குப் போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கையைத் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மறைமுக வாக்கு பதிவு மையங்கள் மற்றும் அதன் வளாகங்கள் முழுமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments