சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற லதா என்ற பெண் செவிலியரை தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதர் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி கன்னத்தில் அடித்து கீழே தள்ளியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரம் சார் ஆட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகிறார்கள். காவல்துறையினர் பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் தீட்சிதர் தலைமறைவாகிவிட்டார்.

Advertisment

protest in chidambaram against natraja temple riest

இதனைதொடர்ந்து அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர்கள் சங்கம் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் செவிலியரை தாக்கிய தீட்சிதர் தர்ஷனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பிரச்சார செயலாளர் மணிமேகலை, கடலூர் மாவட்ட செயலாளர் பானுமதி, மாநிலத் தலைவர் அமுதவல்லி, தமிழ்நாடு அரசு அனைத்து கிராம சுகாதார செவிலியர் நல சங்க மாநில பொதுச்செயலாளர் சுமதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், உள்ளிட்ட தமிழக அளவில் முக்கிய பொறுப்புகளில் உள்ள செவிலியர்கள் திரளாக கலந்துகொண்டு தீட்சிதர் தர்ஷனை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட தீட்சிதர் தர்ஷனை கைது செய்யவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அறிவித்துள்ளனர்.