nlc

என்.எல்.சி சுரங்க பகுதியில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு வேலை, மற்றும் இழப்பீடு கேட்டு உறவினர்களும், தொழிலாளர்களும் சடலத்தை வாங்காமல் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

என்.எல்.சி சுரங்கம் முதலாவது விரிவாக்கத்தினுள் உள்ள கேண்டீனில் பணி செய்து வந்தவர் காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 48). கேண்டீனில் வேலை செய்யும் அவரை, அவருக்கு தெரியாத மண்வெட்டும் வேலையை செய்ய அதிகாரிகள் நிர்பந்தித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்த 15-ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை முடித்து நெய்வேலி என்.எல்.சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஜெயக்குமார் என்.எல்.சி நிறுவனத்துக்காக நிலமும் அளித்துள்ளார் அதனடிப்படையிலும், பணி செய்யும் இடத்தில் அதிகாரிகள் கொடுத்த மன அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், அதிகபட்ச இழப்பீடு தொகையும் வழங்க வேண்டுமென கோரி ஜெயக்குமாரின் உறவினர்களும், தொழிலாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் என்.எல்.சி நிர்வாகம் இந்த மரணத்தை, தொழிற்சாலை விபத்தாக கருத முடியாது (not a Fatel Accident) தற்செயல் Heart Attack என கூறி மேற்கண்ட கோரிக்கையை ஏற்க இயலாது என மறுத்தது. நேற்று நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி வெங்கடேசன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி தரப்பில் சுரங்கம் 1A மனிதவள அலுவலர்கள் சதீஷ்பாபு, அரவிந்த் ஆகியோரும் இறந்த தொழிலாளி தரப்பில் நிலம் கொடுத்த ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் பூவராகவன், பரமசிவம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆறுமுகம், சக்கரையாஸ் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது ஜெயக்குமார் குடும்பத்துக்கு ஒப்பந்த பணி (NON AMC) மட்டுமே வழங்க முடியும் என முரண்டு பிடித்தனர் என்.எல்.சி அதிகாரிகள். இதனை இறந்தவர் தரப்பினர் ஏற்கவில்லை. நிரந்தர பணியும், அதிக பட்ச இழப்பீடும் கேட்பதில் உறுதியாக உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் முதலாவது சுரங்கத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களும், காட்டு கொல்லை கிராமத்தினரும் மூன்று நாட்களாக வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு வேலையும், அதிகபட்ச இழப்பீடும் வழங்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.