Skip to main content

என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - வேல்முருகன் அறிவிப்பு

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
T. Velmurugan

 

 

 

3ஆவது சுரங்கத்திற்கென நிலம் எடுப்பதை என்எல்சி கைவிட வேண்டும்; தமிழக அரசு அதற்குத் துணைபோகாது, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார். மேலும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எதிராக விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
 

 

இதுதொடர்பாக வேல்முருகன் கூறியிருப்பதாவது, 

 


நெய்வேலி அனல் மின் திட்டத்திற்காக சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் -2 என ஏற்கனவே 3 நிலக்கரிச் சுரங்கங்களை என்எல்சி அமைத்துள்ளது. இதற்காக 45 ஊர்களில் நிலங்களை அது கையகப்படுத்தியது. 

 

அந்த நிலங்களுக்குரிய இழப்பீட்டினை இன்றுவரை சரிவர வழங்கவில்லை. அறிவித்தபடி நிலத்தின் உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. நிலம் எடுத்த அந்த கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதி, மின்சாரம், பள்ளி, கல்லூரி என எதையும் நிறைவேற்றவில்லை.



இந்நிலையில் இப்போது 3-வது சுரங்கம் அமைக்கவும் நிலம் கையகப்படுத்துவதில் இறங்கியிருக்கிறது என்எல்சி. இதற்காக 24 ஊர்களில் 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு செயலில் இறங்கியுள்ளது என்எல்சி. 
 


அந்த நிலங்கள் அனைத்துமே விளைநிலங்களாகும்; விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளவையாகும்.

 

அந்த ஊர்களாவன: 1.ஊ.அகரம். 2.அரசக்குழி. 3.ஊ.கொளப்பாக்கம். 4.கோபாலபுரம். 5.குமாரமங்கலம். 6.கோ.ஆதனூர். 7.சு.கீணனூர். 8.கம்மாபுரம். 9.க.புத்தூர். 10.சிறுவரப்பூர். 11.சி.பெ.கோட்டுமுளை. 12.பெருந்துறை. 13.ஓட்டிமேடு. 14.பெருவரப்பூர். 15.சாத்தப்பாடி. 16.ஊ.ஆதனூர். 17.தர்மநல்லூர். 18.விளக்கப்பாடி. 19.மேல் மற்றும் கீழ் வளையமாதேவி. 20.அகர ஆலம்பாடி. 21.பு.ஆதனூர். 22.பெரிய மற்றும் சின்ன நற்குணம். 23.வீரமுடையாநத்தம். 24.எறும்பூர்.

 


ஏற்கனவே உள்ள 3 சுரங்கங்களின் நிலக்கரியே என்எல்சியின் தேவைக்கு அதிகமாகும். அந்த உபரி நிலக்கரியை பிற நிறுவனங்களுக்கு விற்று பெரும் பண லாபம் சம்பாதித்துவருகிறது என்எல்சி. மேலும், முந்தைய 3 சுரங்கங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களில் 10,000 ஏக்கருக்கும் மேல் உபரி நிலம் உள்ளது. இந்த நிலங்களை இதுவரை பயன்படுத்தப்படுத்தவில்ல. 
 


அப்படியிருக்க 3ஆவது சுரங்கத்திற்கென நிலம் கையகப்படுத்துவது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
 

 

தேவைக்கும் அதிகமான நிலம் இருக்கும்போது, மீண்டும் நிலம் கையகப்படுத்துவது என்பது கார்ப்பொரேட்டுகள் வேலையாகவே மோடியின் இந்தியாவில் ஆக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் என்எல்சியும் செய்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
 

 


இதில் கடலூர் மாவட்ட நிர்வாகம் என்எல்சிக்குத் துணைபோவது நன்றாகத் தெரிகிறது. இது தமிழக அரசுக்குத் தெரியுமா தெரியாதா என்பதை தமிழக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம், உடனடியாக இந்த நிலம் கையகப்படுத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே.




என்எல்சியைப் பொறுத்தவரை, ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்போ, கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகளோ எதையும் இதுவரை முறையாக வழங்காதது மட்டுமல்ல; தொடர்ந்து இயற்கைப் பேரிடர்கள் தமிழகத்தை குறிப்பாக கடலூர் மாவட்டத்தைத் தாக்கியபோதெல்லாம் துரும்பைக் கூட கிள்ளிப்போட்டதில்லை என்எல்சி நிர்வாகம். 

 

இப்போது கஜா புயல் பாதிப்பிற்கும் கூட அதன் பங்களிப்பு எதுவுமில்லை.

 

 எனவேதான் சொல்கிறோம்; விரிவாக்கம் என்ற பெயரில் 3ஆவது சுரங்கத்திற்கென நிலம் எடுப்பதை என்எல்சி கைவிட வேண்டும்; தமிழக அரசு அதற்குத் துணைபோகாது, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் காரியத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் துணைபோக்க்கூடாது.


 


இதனை வலியுறுத்தி வரும் 24ந் தேதியன்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது