அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை விரிவாக்கத் துறையும், வேளாண் புலத்தின் பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் பிரிவும் இணைந்து இந்திய குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் விரிவாக்கத்துறைப் பேராசிரியர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார். வேளாண் புலத்தின் முதல்வர் அங்கயற்கண்ணி தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மெட்ராஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (மெப்ஸ்) மேம்பாட்டு ஆணையர் சண்முகசுந்தரம் இ.ஆ.ப இந்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகுவது மற்றும் தேர்வு பெறுவதற்கான வழிகளும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் விரிவாகப் பேசினர். அதேபோல் மெட்ராஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (மெப்ஸ்) இணை மேம்பாட்டு ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் இ.ஆ.ப இந்திய குடிமைப் பணி அதிகாரியாக எப்படி ஆக வேண்டும் என்பதை விட ஏன் ஆக வேண்டும்” என்ற தலைப்பில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (மெப்ஸ்) துணை வளர்ச்சி ஆணையர் பிரபுகுமார், வேளாண்மை விரிவாக்கத்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் வெற்றிசெல்வன், தொழில்முனைவோர் இயக்குநரகத்தின் துணை இயக்குநர் பத்மநாபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வேளாண் புலத்தைச் சார்ந்த இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். இதில் இந்திய குடிமைப் பணிகளுக்கானத் தேர்வுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.