
ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 14ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், இ. திருமகன் ஈ.வெ.ரா., சி.கே. சரஸ்வதி மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என். சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு 1498 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 67 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “1989ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இத்திட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரிய வெற்றியையும் வருமானத்தை ஈட்டி தரும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான மக்களை தேடி மருத்துவம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மட்டுமின்றி எந்த இடங்களில் அவசியமாக உள்ளதோ அந்த இடங்களில் புதிய குடியிருப்புகளை கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.