Professor misbehaved with female students in government college

எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 59 பேர் பணியாற்றி வரும் நிலையில் மெக்கானிக்கல் துறை பேராசிரியராக மதன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பேராசிரியர் மதன்குமார் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 17 வயது மாணவி உட்பட மூன்று மாணவிகள் கல்லூரி முதல்வர் பேபி லதாவிடன் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட பேபி லதா கல்லூரி பெண்கள் பாதுகாப்பு கமிட்டியிடம் அந்த புகாரை கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய கல்லூரி பெண்கள் பாதுகாப்பு கமிட்டி மாணவிகளை அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, இன்று கல்லூரிக்கு விரைந்து சென்றபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்துகல்லூரி முதல்வர் பேபிலதாவை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “புகார் வந்திருப்பது உண்மைதான்; பெண்கள் பாதுகாப்பு கமிட்டி விசாரித்து வருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகுதான் எதையும் தெளிவாக சொல்ல முடியும்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவிகளை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் கல்வி பெண் உரிமை என்று முழக்கமிட்ட மகாகவி பாரதியார் பெயர் கொண்ட அரசு கல்லூரியிலேயே மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது தூக்குத்துகுடி மாவட்டத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி