
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவி(27) ஒருவர் இளங்கலை மற்றும் முதுகலை விவசாயம் பயின்றுள்ளார். அப்போது பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய ராஜா என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பல முறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவி வெளிமாநிலத்தில் விவசாய ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். ஆனால், உதவி பேராசிரியர் ராஜா பல்கலைக்கழகத்தில் படித்தபோது தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படம் வைத்து மாணவியை தற்போது பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நேற்று(30.5.2025) இரவு வீட்டில் இருந்த உதவி பேராசிரியர் ராஜாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ராஜா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் உள்ள சில பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூறுகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் உடன் பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை தற்போது புகார் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? உள்ளது. மாணவி வெளி மாநிலத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறார். அப்படி உள்ள சூழலில் அவர் இங்க வந்து புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இவர் கல்வி குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதைச் சிலருக்கு பிடிக்காததால் மாணவியை தூண்டிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் பல்கலைக்கழக வட்டாரத்தில் உதவி பேராசிரியர் ராஜா பல மாணவிகளிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பல்கலைக்கழகம் எம்.ஏ.எம் ராமசாமி நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தபோது இவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதிற்காக 2 மாதம் சிறையில் இருந்துள்ளார். இது அவரது சர்வீஸ் புத்தகத்திலேயே இடம் பெற்றுள்ளது. எனவே இவர் தொடர்ந்து இது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர் தான் என்கின்றனர்.