Professor arrested for misbehaving with young girl in Coimbatore

Advertisment

கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் திடீரென அவர் வேலையை விட்டு நின்றுள்ளார். ஆனால் வேலைக்கு சேரும் போது அந்த இளம்பெண் தன்னுடைய கல்வி சான்றிதழை கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் திடீரென வேலையை விட்டு நின்றதால் சான்றிதழை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், தனது கல்வி சான்றிதழைப் பெற்றுத் தரக் கல்லூரியில் படித்தபோது தன்னுடைய வகுப்பு பேராசிரியரின் உதவியை இளம் நாடியுள்ளார். அதற்கு பேராசிரியர் சிவப்பிரகாசம்(45) கல்வி சான்றிதழை பெற்று தருவதோடு இளம்பெண்ணிற்கு வேறு வேலையும் வாங்கி தருவதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான் சிவப்பிரகாசம் இளம்பெண்ணிடம் சான்றிதழை வாங்கி வைத்துள்ளதாகவும், வந்துபெற்று கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதனை நம்பி அந்த பெண் பேராசிரியர் சிவப்பிரகாசத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது சிவப்பிரகாசம் அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து வீட்டின் குளியல் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டு தனது பெண் தோழியை செல்போன் மூலம் தொடர்புகொண்டு நடந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பெண்ணின் தோழி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அங்குச் சென்ற காவல்துறை குளியல் அறையில் இருந்த பெண்ணை மீட்டனர். அதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் பேராசிரியர் சிவப்பிரகாசத்தைக் கைது செய்தனர். கல்லூரியில் தன்னிடம் படித்த பெண்ணை பேராசிரியர் ஒருவர் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.