Problem of many years... Road on the same day of petition

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் மெய்யநாதனிடம் மனுகொடுத்த சில மணி நேரத்திலேயே பல வருடமாக இல்லாத சாலைக்கு தீர்வு ஏற்படுத்தினார் கோட்டாட்சியர் முருகேசன்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் குளமங்கலம் தெற்கு கிராமத்தில் குடிநீர் தொட்டி திறக்க வந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி இல்லாததால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத நிலையில் உள்ளதால் பலரது பட்டா நிலத்தில் சென்று வருகிறோம். நிரந்தரமாக சாலை அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை இருந்தது. மனுவைபெற்ற அமைச்சர் மெய்யநாதன் அருகில் இருந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனிடம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கிராம பதிவேடுகளை கொண்டு வரச் செய்து ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட பகுதிக்கு நிலவழிப் பாதை இருப்பதாக வருவாய் கணக்குகளில் காண்பிக்க பட்டிருந்தது. அந்த வரைபடத்துடன் சர்வேயர்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற கோட்டாட்சியர் முருகேசன் அந்தப் பகுதியில் நிலம் வைத்துள்ள பட்டாதாரர்களை அழைத்து நிலவழிப் பாதை உள்ளதால் சாலை அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். பல வருடங்களாக நில உரிமையாளர்களாக இருந்த விவசாயிகள் சாலை அமைக்க எதிர்ப்பு காட்டாமல் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் சாலை அமைக்க வேண்டும் என்று ஒத்துழைப்பு கொடுத்தனர்.

Advertisment

Problem of many years... Road on the same day of petition

அதனைத் தொடர்ந்து திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ரஞ்சித் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வருவாய்த் துறை அலுவலர்களுடன் 5 பொக்கலின் இயந்திரங்களின் உதவியுடன் சாலை அமைக்கும் பணி மாலை வரை நடந்தது. கடைசி வரை சம்பவ இடத்திலேயே நின்று சாலைப் பணிகள் நடப்பதை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார். சாலைப் பணிகள் நடந்து வருவதை அமைச்சர்பல முறை தொலைபேசியில்கேட்டறிந்தார்.

பல வருடங்களாக பாதை இல்லாமல் தவித்த மக்களுக்கு ஒரே நாளில் தீர்வு கண்ட அமைச்சர் மெய்யநாதனுக்கும் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி கூறினார்கள்.