இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், விழாக்குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஞானசேகரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கலைஞர் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்புகளை செய்துள்ளார்கள். மேலும் அவர்களது முயற்சியால் தமிழ்மொழி செம்மொழியாக உலகம் முழுவதும் சிறந்து விளங்குகிறது.
கலைஞர் நிறைவேற்றிய சட்டங்களும், திட்டங்களும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்களே ஆகும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முன்னோடி திட்டங்களை அறிவித்து சிறப்பு சேர்த்தவர் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.