உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இதில் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வடபருத்தியூர் ஊராட்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 4545 மரக்கன்றுகளை அமைச்சர் சக்கரபாணி நட்டு வைத்தார்.
அதைத் தொடர்ந்து, பழனிகீரனூரில் உள்ள குருகுலப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும் சீருடைகளும் வழங்கியதுடன் மட்டுமல்லாமல் அந்த மாணவ மாணவிகளோடு உட்கார்ந்து மதிய உணவையும் சாப்பிட்டார். அதுபோல் அங்குள்ள ஆதரவற்றப் பெரியோர்களுக்கும் புத்தாடைகளை வழங்கி மருத்துவப் பரிசோதனையும் செய்தனர். அதைத் தொடர்ந்து, கள்ளிமந்தயத்தில் இல்லம் தேடி இளைஞர்களின் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “ஒட்டன்சத்திரம் தொகுதியில் அடுத்த ஆண்டுக்குள் சீமை கருவேலமரங்கள் இல்லாத ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்படும். அதுபோல் தமிழகத்தைபசுமை மாநிலமாக ஆக்க முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால்பொதுமக்கள் தங்கள் வீடுகள்தோறும் மரக்கன்றுகளை நட்டு வைக்க முன்வர வேண்டும்” என்று கூறினார்.