Skip to main content

தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகள் கட்டண நிர்ணய உத்தரவை எதிர்த்து வழக்கு!  உயர் கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020
Private Teacher Education Colleges Case Against Tariff Setting Higher Education Department to reply!

 

தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், தமிழக உயர் கல்வித் துறையும், கட்டண நிர்ணயக் குழுவும்,  ஜூன் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க,  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து,  தமிழக உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இக்குழு, 2016-ம் ஆண்டு,  கல்லூரிகளின் செலவு கணக்கு விவரங்களைக் கேட்டு, கட்டணங்களை நிர்ணயித்தது. 2016 – 17 முதல் 2018 – 19  வரையிலான மூன்று   கல்வியாண்டுகளுக்கு, இந்தக் கட்டணங்கள் அமலில் இருந்தன.

2019 – 20 முதல் 2021 – 22 -ம் கல்வியாண்டுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்து,  கட்டண நிர்ணயக் குழு 2019 செப்டம்பர் 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. விதிகளைப் பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக்கூறி கட்டண நிர்ணயக் குழு உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில்,  அதன் பொதுச் செயலாளர் நடராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் மொத்தமுள்ள 696 கல்லூரிகளில், 285 கல்லூரிகள் கட்டண விகிதங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில், செலவுகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்த 85 கல்லூரிகளுக்கு, ஒரு மாணவருக்கு 42 ஆயிரத்து 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்தது.

கட்டண நிர்ணயத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்காத 200 கல்லூரிகளுக்கு,  25 ஆயிரம் ரூபாயும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 411 கல்லூரிகள் கட்டண விகிதங்களை சமர்ப்பிக்காததால், அவற்றுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து,  கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில்,   கட்டண விகிதங்களை மாற்றியமைக்கக்கோரி,  உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் அடிப்படையில், பல கல்லூரிகள் கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக்கோரி விண்ணப்பித்த நிலையில், கட்டண நிர்ணயக் குழு தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி இறந்து விட்டதால், கல்லூரிகளின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு,  நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான குழுவுக்கு,  புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவுக்கு ஜூன் 29-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறைக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.