தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பைபிள் வழங்கி மதமாற்றம் செய்வதாக கூறி இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி ரோட்டில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. கிறித்துவர்களால் நடத்தப்பட்டும் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு பைபிள்களை வழங்கி, அதை படிக்க சொல்லி அதில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்குவதாக புகார் எழுந்தது.
"அந்த பள்ளியில் மாணவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, 16ம் தேதி பள்ளி முன் போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியினர் முடிவு செய்தனர். இதனிடையே, கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாஜலம் தலைமையில் அமைதி பேச்சுவார்தைக்கு அனைவரும் அழைக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதுகுறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி நம்மிடம், "பள்ளி மாணவர்களுக்கு பைபிள் வழங்கி மதமாற்றம் செய்வதோடு, பைபிளில் இருந்து கேள்வி கேட்டு தேர்வு நடத்தி அதிலிருந்து மதிப்பெண் வழங்குகின்றனர். இத்தோடு அதை நிறுத்தவில்லை என்றால் பள்ளி முன் போராட்டம் நடத்துவோம்," என்றார்.
பள்ளி தாளாளர் ஜான் கூறுகையில், "பள்ளி ஆண்டுவிழாவின் போது மட்டுமே பைபிளில் இருந்து தேர்வு நடத்தி அதில் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு 200 மாணவர்களில் 14 பேர் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொண்டனர். இது தவிர அவர்கள் கூறுவதுபோல மதமாற்றமெல்லாம் நாங்கள் செய்யவில்லை, நடக்கவும் இல்லை."என்றார்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எம்.ரத்தினசேலுவோ, "இனிமேல் பள்ளியில் பைபிள் வழங்கக்கூடாது என கூறியுள்ளோம். எவ்வித மதப்பிரச்சாரத்திலும் பள்ளி நிர்வாகம் ஈடுபடக்கூடாது என்று கூறியிருக்கிறோம் என தெரிவித்தார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
- க.செல்வகுமார்
பைபிள் வழங்கும் தனியார் பள்ளி! இந்து மக்கள் கட்சி ஆவேசம்!
சார்ந்த செய்திகள்
Next Story
மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024) அளித்திருந்தார்.
இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.