Skip to main content

"தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசிகளை..."- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

 

private hospitals coronavirus vaccines admk chief opanneerselvam

தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசிகளை அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உணவுப் பஞ்சமும், தொற்று நோய்களும், அந்நியர்களின் படையெடுப்பும் வராதபடி நடத்தப்படுகிற நாடே நல்ல நாடு என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க அவற்றைச் செயல்படுத்தும் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இதன் அடிப்படையில், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா கொடுந்தொற்று நோயினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி (Two Doses) என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 16 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன. 26/06/2021 அன்று காலை நிலவரப்படி, மொத்தம் 1,44,83,205 தடுப்பூசிகள் தமிழக மக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது பத்து விழுக்காட்டிற்கும் குறைவாகத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

 

இந்தச் சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் விநியோகிக்கப்பட்ட 13.9 லட்சம் மருந்துகளில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றும், ஜூலை மாதத்திற்கு 71.5 லட்சம் மருந்துகளை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்றும், இதில் 17.75 லட்சம் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. ஏற்கனவே, 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில் ஜூலை மாதத்திற்கென்று மேலும் 17.75 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன. 

 

பொதுவாக மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்வதற்குக் காரணம், அங்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுவதும், இணையதளத்திற்கு சென்று எந்தவிதமான பதிவும், முன்னேற்பாடும் இல்லாமல் நேரடியாக தடுப்பூசி செலுத்துகின்ற வசதி உள்ளதும்தான். இது மட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றில் இலவச தடுப்பூசி முகாம்களை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தியிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். 

 

அதேசமயத்தில், தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசிக்கு 850 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பணம் செலுத்தக்கூடிய நிலை இருக்கின்றது. இது தவிர, முன்பதிவு அவசியம் என்ற நிலைமையும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த காரணங்களால், தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாதத் தடுப்பூசி மருந்துகள் லட்சக்கணக்கில் தேங்கி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள பயன்படுத்தப்படாத மருந்துகளைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். 

 

எனவே, தமிழக முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் தமிழகத்தின் தேவை விரைவில் பூர்த்திச் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.