Skip to main content

"தவணையை கட்டுங்க... இல்லேன்னா அபராத வட்டி கட்ட வேண்டியிருக்கும்" பெண்களை மிரட்டும் தனியார் நிதிநிறுவனங்கள்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
cuddalore


கரோனா நோய் தொற்றினை தடுக்கும் வகையில் மத்திய,  மாநில அரசுகள் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கும் மேலாக ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் உள்ளது.


மூன்று மாதங்களாக நீடிக்கும் ஊரடங்கினால் பொதுமக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமலும், வருவாய் இல்லாமலும் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய,  மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கி பொதுமக்கள் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன் தொகைக்கான வட்டியுடன் கூடிய தவணைத் தொகையை 3 மாத ஊரடங்கு காலம் மற்றும் அதற்கடுத்த 3 மாதம் என 6 மாதத்திற்கு வசூலிக்க கூடாது என்று அறிவித்துள்ளது. 


ஆனால் பல தனியார் நிதிநிறுவனங்கள் மகளிர் குழுக்களிடம் கொடுத்த கடனை இரண்டு மாதங்களாக வசூலிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஜூன் மாதம் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், 'மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான தவணை தொகைகளுடன் ஜூன் மாதத்திற்கான தவணைத் தொகையும் ஒரே தவணையில் கட்டினால் வட்டி இல்லை. அவ்வாறு கட்டவில்லை என்றால் தவணைகள் முடிந்த கடைசி மாதத்திற்கு அடுத்த மாதம் ஊரடங்கு காலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான தவணைத் தொகையை அபராத வட்டியுடன் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் இப்போதே மூன்று மாதத்திற்கான தவணைகளை செலுத்துவது நல்லது' என  மறைமுகமாக மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து  கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் குழு பெண்கள் அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

 
நேற்று கீழ்கவரப்பட்டு,  ஆண்டிப்பாளையம், கடலூர் முதுநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க  வந்தனர். அப்போது அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கிட அனுமதித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, "நாங்கள் எக்விடாஸ், உஜ்ஜீவன், சான்ட்டின், முத்தூட் பின்கார்ப், ஜனா லோன், லோகு மேனேஜ்மென்ட், மதுரா போன்ற தனியார் நிதி நிறுவனங்களில் சுய உதவி குழு கடன் பெற்றுள்ளோம். கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் கடன் தவணை தொகையை கட்ட வேண்டாம் என்று அரசாங்கங்கள் அறிவித்தன. அதனால் நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்களும் எங்களிடம் பணம் வசூலிக்க வரவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு இன்னும்  முடியாத சூழ்நிலையில் தற்போது கடன் கொடுத்த நிதி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் எங்களிடம் ஜூன் மாதத்தில் மூன்று மாதங்களுக்கான தவணை தொகையை கட்ட வேண்டுமென்றும், அவ்வாறு கட்டவில்லை என்றால் கடைசி மாதத்தில் இந்த மூன்று மாதங்களுக்கான தவணை தொகையுடன் அபராத வட்டி போட்டு கட்ட வேண்டியிருக்கும் என்று மிரட்டுகின்றனர். அரசாங்க உத்தரவை நாங்கள் மேற்கோள்காட்டியும் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.  அபராத வட்டி கட்டி தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தப் படுத்துகின்றனர்.  


ஊரடங்கு காலத்தில் நாங்கள் வேலைக்கு செல்லாமல், வருவாய் இல்லாமல் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்படுகிறோம். எங்களிடம் ஒரே தவணையில் மூன்று மாத தொகைகளையும் கட்ட சொன்னால் எங்களால் எப்படி கட்ட முடியும். இதன் மூலம் அரசாங்கம் அறிவித்த சலுகை எங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாமல் எங்களை மேலும் கஷ்டப்படுத்தவே செய்கிறது. எனவே கடன் தவணைத் தொகை கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் நிதி நிறுவனங்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.


தனியார் நிதி நிறுவனங்களின் மறைமுக நெருக்கடியால் பொதுமக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.