Skip to main content

நிலுவை சம்பளத்தைக் கேட்ட பெண்; பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன அதிகாரிகள்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

private company Officers misbehaved with women who asked for salary

 

கோவையில் நிலுவையில் உள்ள சம்பளத்தைக் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது சம்பள பாக்கியைக் கேட்டு சென்ற பொழுது தனக்கு பாலியல் தொந்தரவு தந்தார்கள் என பீளமேடு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், "நான், கோவை-அவினாசி சாலையில் ஹோப் காலேஜ் அருகேயுள்ள ஸ்ரீநகரில் ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தேன். எனக்கு ரூ. 70 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்பட்டது.

 

பின்னர் தனிப்பட்ட காரணத்தால் பணியில் இருந்து நின்றுவிட்டேன். அப்போது எனக்கு தனியார் நிறுவனம் சார்பில் 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. எனவே, இதுதொடர்பாக நிறுவன அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததுடன், சரியாக பதிலும் அளிக்கவில்லை. இதனால், நான் நேரடியாகவே நிறுவனத்திற்கு வந்து சம்பள பாக்கியை தருமாறு கேட்டேன். அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் சுதாகர் மற்றும் சின்னகாளி இருவரும் சம்பள பணம் வேண்டும் என்றால் ஆசைக்கு இணங்குமாறும், பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்கள், என்னை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது சம்பள பாக்கியை பெற்றுத்தர வேண்டும்." என குறிப்பிட்டு இருந்தார்.

 

இதனடிப்படையில் பீளமேடு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். பின்னர், பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர்கள் சுதாகர் மற்றும் சின்னகாளி இருவர் மீதும்  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். மேலும், தொடர்ந்து இது இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சொல்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.