Skip to main content

“தனியார் நிறுவன பால் கொள்முதல் விலை சுரண்டலை தடுக்க வேண்டும்!” - ராமதாஸ் 

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

"Private companies must stop exploiting milk purchase prices!" - Ramadoos


கரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலை குறைத்து நிர்ணயத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில்,  “கரோனா வைரஸ் தொற்று பரவலால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு பால் கொள்முதல் விலையைத் தனியார் பால் நிறுவனங்கள் கணிசமாக குறைந்துள்ளன. பால் உற்பத்தியாளர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் நிறுவனங்கள் பால் விலையைக் குறைத்திருப்பது பெரும் சுரண்டலாகும்.

 

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 17ஆம் தேதி முதல் ஊரடங்கும், 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. அதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. ஆனால், மருந்து கடைகளும் பால் விற்பனை நிலையங்களும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் பால் விற்பனை குறையவில்லை. ஆனால், பால் விற்பனை குறைந்துவிட்டதாகக் கூறி விவசாயிகளிடமிருந்து  கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையைத் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் குறைத்திருக்கின்றன.

 

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்காத பசும்பாலை ரூ.18 என்ற விலைக்குத்தான் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ. 32 என்ற விலைக்கும், ஒரு லிட்டர் எருமைப்பாலை ரூ. 41 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் எந்தப் பாலாக இருந்தாலும் 18 ரூபாய்க்கு மேல் தருவது கிடையாது. இது வழக்கமான கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது 40 விழுக்காடு குறைவாகும்.

 

தனியார் பால் நிறுவனங்களுக்கென அதிகாரப்பூர்வமாக கொள்முதல் விலை எதுவும் கிடையாது. ஆவின் நிறுவனம் எந்த விலைக்கு பாலைக் கொள்முதல் செய்கிறதோ, அதே விலைக்கு தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்துவந்தன. சில நேரங்களில் தேவை அதிகமாக இருந்தால் ஆவின் நிறுவனத்தைவிட கூடுதல் விலை கொடுத்தும் பாலைக் கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால், இப்போது ஊரடங்கைக் காரணம் காட்டி பால் விலையைக் குறைப்பதைவிட பெரிய மோசடி இருக்க முடியாது.

 

தமிழ்நாட்டில் பாலுக்கான தேவை எந்தவகையிலும் குறையவில்லை. பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் விலையைக் குறைக்கவில்லை. இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது. மாறாக, தனியார் பால் விலைகள் கடந்த ஜனவரி மாதத்தில் லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டன. தமிழ்நாட்டில் ஆவின் பாலின் அதிகபட்ச விலை லிட்டர் ரூ. 48 மட்டும்தான். ஆனால், தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை அதிகபட்சமாக ரூ. 64 வரை விற்பனை செய்கின்றன. ஆவின் நிறுவனத்தைவிட ஒரு லிட்டர் பாலை ரூ. 16 கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ. 14 குறைப்பது எந்தவகையில் நியாயம்? இந்த அநியாயத்தையும், அற மீறலையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.

 

கால்நடைகளுக்கான தீவனம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அண்மைக்காலங்களில் கடுமையாக உயர்ந்துவிட்டன. அதனால், ஒரு லிட்டர் பாலுக்கான உற்பத்திச் செலவு 30 ரூபாயை நெருங்கிவிட்டது. பால் உற்பத்திக்கான மாடுகளை வளர்க்க கிராமப்புறங்களில் பெண்கள் படும்பாடுகளைப் பட்டியலிட முடியாது. கடந்த இரு ஆண்டுகளாக ஆவின் பால் கொள்முதல் விலையும், தனியார் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  இத்தகைய சூழலில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையைக் குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடாது. நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும்.

 

பொதுவாகவே பால் மிக மிக அத்தியாவசியமான உணவுப் பொருள் ஆகும். பால் விற்பனை விலையாக இருந்தாலும், கொள்முதல் விலையாக இருந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை விருப்பம் போல உயர்த்துவதையும், கொள்முதல் விலையை இஷ்டம் போல் குறைப்பதையும் தடுக்க தமிழ்நாட்டில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். அதற்கும் முன்பாக தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.