Skip to main content

அரசு கல்லூரியில் தனியார் கட்டணம்! - தொடர்ந்து போராடும் மருத்துவ மாணவர்கள்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

Private college fees in government colleges - medical students who continue to struggle ..!


ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. 

 

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் தற்போது கரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் இது செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பிறகும், தனியார் மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான (ஆண்டு ஒன்றிற்கு)  ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. 

 

ஆனால், மற்ற அரசு கல்லூரியில், ஆண்டுக் கட்டணம் 13 ஆயிரத்து 600 ரூபாய்தான். இந்த தொகையைத்தான் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும். இந்த கோரிக்கையை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தொடர்ந்து தமிழக அரசிடம் முன்வைத்து பல போராட்டங்களையும் நடத்தினர்.


அப்போது, விரைவில் அரசு அறிவிப்பு வரும் என்று உயரதிகாரிகள், மாணவர்களைச் சமாதானப்படுத்தி போராட்டங்களை கைவிட வைத்தனர். இந்த நிலையில், 5ஆம் தேதி மாணவ, மாணவியர்கள் மீண்டும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று 6ஆம் தேதி இரண்டாவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து கல்விக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கல்லூரியின் முன்பு அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


தமிழக அரசு கல்விக் கட்டணத்தைக் குறைத்து உத்தரவு வழங்கும் வரையில் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு கல்லூரியாக அறிவித்த பிறகு தனியார் கல்லூரி போல் மாணவர்களிடம் அரசே கட்டணம் வசூலிப்பது கொள்ளையடிப்பது போல உள்ளது என்று மாணவர்கள் தமிழக அரசு மீது கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மாறி மாறித் தாக்கிக் கொண்ட அரசு மருத்துவரும் பெண் நோயாளியும்; வேலூரில் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Government doctor and female patient who took turns beating in Vellore

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சுபா(36) இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இவரைக் காண ஆண் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு ஆண்கள் உள்ளே வரக்கூடாது என வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

நான் யார் தெரியுமா, வெளியில எல்லாம் போக முடியாது... நீ போ என ஒருமையில் மருத்துவரிடம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது நோயாளி சுபாவும் மருத்துவரை தாக்கியுள்ளார். அதோடு தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து பெண் செவிலியர்கள் தடுக்க முடியாமல், ‘ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க...’ என கத்தினர். அதன்பின் அருகில் இருந்த நோயாளியை பார்க்க வந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதும், மருத்துவமனைக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள மருத்துவரை தாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில், நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை வார்டுக்கு வந்த மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர் தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கியதாக தெரிவித்தார். 

இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக்கூடாது. ஆனால் அந்த நபர் படுக்கையில் படுத்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” எனக் கூறினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளி, மருத்துவர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.