Skip to main content

மனதளவில் பாதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு சிறப்பு சிகிச்சை!- அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவு! 

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

ராஜா என்பவர் மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர். உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் மத்திய சிறைச்சாலைகள்- 9, மகளிர் சிறைகள்- 3, மாவட்ட சிறைகள்- 9, சப்-ஜெயில்கள்- 95 மற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகள்- 12 உள்ளன. இங்கெல்லாம், நான்காயிரம் தண்டனைக் கைதிகளும், ஒன்பதாயிரம் விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சிறைகளில் அடைபட்டுள்ள கைதிகளில் பலரும், தங்கள் மனைவி, தாய், தந்தை, பாட்டி, குழந்தைகள் போன்ற குடும்ப உறவினர்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கொலை செய்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டவுடன் அதனை நினைத்து மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு மனநல சிகிச்சை எதுவும் அளிக்கப்படுவதில்லை.

PRISONERS RELATED CASE MADURAI HIGH COURT BRANCH ORDER

இங்குள்ள கைதிகள் மனதளவில் பாதிப்புக்கு ஆளானால், இவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கும் வசதி தற்போது உள்ளது. எனவே, திருச்சி, மதுரை போன்ற சிறைச்சாலைகளிலும் மனநல மருத்துவமனைகளை ஏற்படுத்தி, மனநல பாதிப்புக்கு ஆளான கைதிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கென மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், செவிலியர்கள் போன்றவர்களை நியமித்து சிகிச்சை அளிப்பதற்கு சிறைத்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டும்.’என்று தெரிவிக்கப்பட்டது. 

PRISONERS RELATED CASE MADURAI HIGH COURT BRANCH ORDER

 

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வானது, இதுகுறித்து மனுதாரர், உள்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்திடவும், இதனைப் பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். 





 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.