Skip to main content

சிறையில் கைதி மரணம்... காரணம் மதுவிலக்கு பிரிவினரின் லஞ்ச வெறியா?

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Prisoner incident in thiruvannamalai

 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்டது இளையாங்குன்னி ஊராட்சி. இதன் அருகிலுள்ள தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான தங்கமணி. ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நீண்ட காலமாக சாராயம் விற்பனை செய்யும் வியாபாரி. இவரை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி விசாரணைக்காக மதுவிலக்கு குற்றப்பிரிவு (கலால்) போலீசார் தங்கமணியை அவரது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

சாராய விற்பனை வழக்கில் கைது செய்து ஏப்ரல் 27 ஆம் தேதி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளைச்சிறையில் அடைத்தனர். மதியம் தங்கமணிக்கு வலிப்பு வந்ததாக சிறைத்துறை தரப்பிலிருந்து தங்கமணி குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர். மாலை 4 மணியளவில் தங்கமணி இறந்துவிட்டதாக தகவல் கூறியுள்ளனர்.

 

தந்தையை கைது செய்ததும், அதுகுறித்து நாங்கள் விசாரித்தபோது, 2 லட்ச ரூபாய் பணம் தந்தால் சாதாரண வழக்குப்போட்டு விட்டுவிடுகிறோம், இல்லையேல் குண்டாஸ் என மிரட்டினார்கள் கலால் பிரிவு போலீசார் என குற்றம்சாட்டினர் தங்கமணியின் குடும்பத்தினர். இதுக்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்சிடம் முறையிட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தபோது, கலெக்டர் அலுவலக கதவுகளை மூடி அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

Prisoner incident in thiruvannamalai

 

குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்ற கஸ்டடியில் சிறையிலிருந்தபோது மரணமடைந்ததால் நீதித்துறை விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது சட்டம். அதன்படி திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பாக்யராஜ் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அவரின் மேற்பார்வையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

 

என் தந்தையை அடித்துக் கொன்று விட்டார்கள், அவரது முகத்தில், கையில் காயம் உள்ளது, பிரேதப் பரிசோதனை அறிக்கை வரட்டும், அதன்பின் உடலை வாங்கிக் கொள்கிறோம் எனச்சொன்ன குடும்பத்தினர், என் தந்தை இறப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனால் உடல் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 

காவல்துறை அதிகாரிகள் என்னிடம் பிரச்சனை செய்யாதீர்கள், பின்னால் உங்களை விட மாட்டோம், உடலை வாங்கிக்கொண்டு அமைதியாக போங்கள். அவர் இறந்ததுக்கு நஷ்ட ஈடு 7 லட்சம் தருகிறோம் என பேரம் பேசி மிரட்டுகிறார்கள். சாகடிக்கவில்லை என்றால் பிறகு எதற்கு பணம் தரவேண்டும்? என கேள்வியும் எழுகிறது.

 

இதுக்குறித்து காவல்துறையில் நேர்மையான காவலர்களிடம் கேட்டபோது, 'அரசுப் பணியில் இருப்பவர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது விதி. காவல்துறையிலும்  3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதில் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவலர்கள் மட்டும் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதற்கு காரணம் மாமூல். மதுவை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட பிரிவு என்றாலும், இந்த பிரிவில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள், கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்பவர்கள், வெளிமாநில மதுப்பானங்களை கொண்டு வந்து விற்பவர்கள் என பெரிய பட்டியலே உள்ளது. அந்த பட்டியலை வைத்துக் கொண்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தோம், அழித்தோம், வியாபாரிகளைக் கைது செய்து செய்தோம் என வீடியோ, போட்டோ வெளியிடுவார்கள். உண்மையில் இது எல்லாம் அரசுக்கு கணக்கு காட்டத்தான். வழக்கு போட்டாலும், குண்டர் சட்டத்தில் அடைத்தாலும் திரும்ப வந்து அவர்களை தொழில் செய்ய வைப்பார்கள். ஏன் எனில் அவர்களிடமிருந்து வரும் மாமூல் அப்படி.

 

ஒரு சாராய வியாபாரி குறிப்பிட்ட காவல்நிலையத்துக்கு மாதாமாதம் மாமூல் தருவதுப்போல், கலால் பிரிவு போலீசாருக்கும் தருவார்கள். இதையெல்லாமே காய்ச்சுபவன், வியபாரியின் தன்மை, விற்பனையைப் பொறுத்து ஆயிரம் முதல் லட்சங்கள் வரை மாதாமாதம் மாமூல் வாங்குவார்கள். சாதாரண பிக்பாக்கெட் கேஸில் சிக்குபவனை கூட அடிப்பார்கள், சாராய கேஸில் பிடித்து வருபவர்களை மட்டும் எந்த நிலையிலும் அடிக்க மாட்டார்கள். காரணம் அந்தளவுக்கு மாமூல் தந்து மாமன் – மச்சானாக பழகுவார்கள்' என்றார்கள்.

 

இந்த வழக்கிலும் சம்மந்தப்பட்ட சாராய வியாபாரிக்கு அடிக்கடி வலிப்பு வரும் எனச் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு லோக்கல் போலீசார் பிடித்துவந்து ஸ்டேஷனில் வைத்திருந்தபோது வலிப்பு வந்ததால் அப்போது டூட்டியில் இருந்த போலீசார் பயந்து போயினர். அதனால் வழக்கு போட்டு ஜாமீனில் விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

 

தற்போது கலால் பிரிவில் இடமாற்றம் நடக்கவுள்ளது, அதற்குள் கலெக்ஷனை முடிக்க வேண்டும்மென, சாராய வியாபாரிகளிடம் வசூல் நடத்துகிறார் குறிப்பிட்ட அதிகாரி. இதற்காகக் கடந்த ஒரு மாதமாக இறந்துப்போன சாராய வியாபாரியிடம் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் முடியாது என மறுக்க 1 லட்சம் தந்தே ஆக வேண்டும் என நெருக்கடி தந்துள்ளார். இது மாதாந்திர மாமூல் இல்லாமல் தனியாக கேட்டத்தொகை. அவ்வளவு பணத்தை தரமுடியாது எனச்சொன்னதால் கைது செய்தனர். பணம் வராது என்றதும் குண்டாஸ் போட முடிவு செய்து மிரட்டியுள்ளனர். இந்த மன உளைச்சலில் இருந்தவருக்கு உடல் முடியாமல் போய் இறந்துள்ளார்.

 

இது லாக்கப் டெத்தோ, சிறை டார்ச்சரோ கிடையாது, உடல்நிலைக்கோளாறுதான். அவருக்கு எங்க அதிகாரிகள் சிலர் பணம் கேட்டு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர்களை காப்பாற்றவே எஸ்.பி முதல் டி.ஐ.ஜி வரை முயற்சி செய்கிறார்கள் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.