Skip to main content

சிறையில் கைதி மரணம்... காரணம் மதுவிலக்கு பிரிவினரின் லஞ்ச வெறியா?

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Prisoner incident in thiruvannamalai

 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்காவுக்கு உட்பட்டது இளையாங்குன்னி ஊராட்சி. இதன் அருகிலுள்ள தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான தங்கமணி. ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நீண்ட காலமாக சாராயம் விற்பனை செய்யும் வியாபாரி. இவரை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி விசாரணைக்காக மதுவிலக்கு குற்றப்பிரிவு (கலால்) போலீசார் தங்கமணியை அவரது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

சாராய விற்பனை வழக்கில் கைது செய்து ஏப்ரல் 27 ஆம் தேதி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளைச்சிறையில் அடைத்தனர். மதியம் தங்கமணிக்கு வலிப்பு வந்ததாக சிறைத்துறை தரப்பிலிருந்து தங்கமணி குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர். மாலை 4 மணியளவில் தங்கமணி இறந்துவிட்டதாக தகவல் கூறியுள்ளனர்.

 

தந்தையை கைது செய்ததும், அதுகுறித்து நாங்கள் விசாரித்தபோது, 2 லட்ச ரூபாய் பணம் தந்தால் சாதாரண வழக்குப்போட்டு விட்டுவிடுகிறோம், இல்லையேல் குண்டாஸ் என மிரட்டினார்கள் கலால் பிரிவு போலீசார் என குற்றம்சாட்டினர் தங்கமணியின் குடும்பத்தினர். இதுக்குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்சிடம் முறையிட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தபோது, கலெக்டர் அலுவலக கதவுகளை மூடி அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

Prisoner incident in thiruvannamalai

 

குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்ற கஸ்டடியில் சிறையிலிருந்தபோது மரணமடைந்ததால் நீதித்துறை விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது சட்டம். அதன்படி திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பாக்யராஜ் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அவரின் மேற்பார்வையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

 

என் தந்தையை அடித்துக் கொன்று விட்டார்கள், அவரது முகத்தில், கையில் காயம் உள்ளது, பிரேதப் பரிசோதனை அறிக்கை வரட்டும், அதன்பின் உடலை வாங்கிக் கொள்கிறோம் எனச்சொன்ன குடும்பத்தினர், என் தந்தை இறப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனால் உடல் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 

காவல்துறை அதிகாரிகள் என்னிடம் பிரச்சனை செய்யாதீர்கள், பின்னால் உங்களை விட மாட்டோம், உடலை வாங்கிக்கொண்டு அமைதியாக போங்கள். அவர் இறந்ததுக்கு நஷ்ட ஈடு 7 லட்சம் தருகிறோம் என பேரம் பேசி மிரட்டுகிறார்கள். சாகடிக்கவில்லை என்றால் பிறகு எதற்கு பணம் தரவேண்டும்? என கேள்வியும் எழுகிறது.

 

இதுக்குறித்து காவல்துறையில் நேர்மையான காவலர்களிடம் கேட்டபோது, 'அரசுப் பணியில் இருப்பவர்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது விதி. காவல்துறையிலும்  3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதில் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவலர்கள் மட்டும் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதற்கு காரணம் மாமூல். மதுவை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட பிரிவு என்றாலும், இந்த பிரிவில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள், கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்பவர்கள், வெளிமாநில மதுப்பானங்களை கொண்டு வந்து விற்பவர்கள் என பெரிய பட்டியலே உள்ளது. அந்த பட்டியலை வைத்துக் கொண்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தோம், அழித்தோம், வியாபாரிகளைக் கைது செய்து செய்தோம் என வீடியோ, போட்டோ வெளியிடுவார்கள். உண்மையில் இது எல்லாம் அரசுக்கு கணக்கு காட்டத்தான். வழக்கு போட்டாலும், குண்டர் சட்டத்தில் அடைத்தாலும் திரும்ப வந்து அவர்களை தொழில் செய்ய வைப்பார்கள். ஏன் எனில் அவர்களிடமிருந்து வரும் மாமூல் அப்படி.

 

ஒரு சாராய வியாபாரி குறிப்பிட்ட காவல்நிலையத்துக்கு மாதாமாதம் மாமூல் தருவதுப்போல், கலால் பிரிவு போலீசாருக்கும் தருவார்கள். இதையெல்லாமே காய்ச்சுபவன், வியபாரியின் தன்மை, விற்பனையைப் பொறுத்து ஆயிரம் முதல் லட்சங்கள் வரை மாதாமாதம் மாமூல் வாங்குவார்கள். சாதாரண பிக்பாக்கெட் கேஸில் சிக்குபவனை கூட அடிப்பார்கள், சாராய கேஸில் பிடித்து வருபவர்களை மட்டும் எந்த நிலையிலும் அடிக்க மாட்டார்கள். காரணம் அந்தளவுக்கு மாமூல் தந்து மாமன் – மச்சானாக பழகுவார்கள்' என்றார்கள்.

 

இந்த வழக்கிலும் சம்மந்தப்பட்ட சாராய வியாபாரிக்கு அடிக்கடி வலிப்பு வரும் எனச் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு லோக்கல் போலீசார் பிடித்துவந்து ஸ்டேஷனில் வைத்திருந்தபோது வலிப்பு வந்ததால் அப்போது டூட்டியில் இருந்த போலீசார் பயந்து போயினர். அதனால் வழக்கு போட்டு ஜாமீனில் விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

 

தற்போது கலால் பிரிவில் இடமாற்றம் நடக்கவுள்ளது, அதற்குள் கலெக்ஷனை முடிக்க வேண்டும்மென, சாராய வியாபாரிகளிடம் வசூல் நடத்துகிறார் குறிப்பிட்ட அதிகாரி. இதற்காகக் கடந்த ஒரு மாதமாக இறந்துப்போன சாராய வியாபாரியிடம் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் முடியாது என மறுக்க 1 லட்சம் தந்தே ஆக வேண்டும் என நெருக்கடி தந்துள்ளார். இது மாதாந்திர மாமூல் இல்லாமல் தனியாக கேட்டத்தொகை. அவ்வளவு பணத்தை தரமுடியாது எனச்சொன்னதால் கைது செய்தனர். பணம் வராது என்றதும் குண்டாஸ் போட முடிவு செய்து மிரட்டியுள்ளனர். இந்த மன உளைச்சலில் இருந்தவருக்கு உடல் முடியாமல் போய் இறந்துள்ளார்.

 

இது லாக்கப் டெத்தோ, சிறை டார்ச்சரோ கிடையாது, உடல்நிலைக்கோளாறுதான். அவருக்கு எங்க அதிகாரிகள் சிலர் பணம் கேட்டு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர்களை காப்பாற்றவே எஸ்.பி முதல் டி.ஐ.ஜி வரை முயற்சி செய்கிறார்கள் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.