Skip to main content

விசாரணை கைதி சந்தேக மரணம்- வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

prisoner incident kondugaiyur police station cbcid investigation

 

கொடுங்கையூர் காவல்நிலைய விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நள்ளிரவு வரை விசாரணை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். 

 

சென்னை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திருவள்ளூர் மாவட்டம், அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, செங்குன்றத்தில் உள்ள கூட்டாளியிடம் நகைகள் இருப்பதாக கூறியதாகவும், அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்றும் நகைகளை மீட்க முடியவில்லை என்று தெரிகிறது. 

 

இந்த நிலையில், ராஜசேகரை கொடுங்கையூர் புற காவல் நிலையத்தில் வைத்து காலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, திடீரென உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைப் பெற செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை அறிவுறுத்தலின் பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். 

 

உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன. 

 

விசாரணை கைது மரணமடைந்ததையறிந்த சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஷ்வரி, புளியந்தோப்பு இணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். 

 

ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்கள் யார் யார்? எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது? என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெய் சேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வடக்கு மண்டல காவல் கூடுதல் ஆணையர் அன்பு, "ஒன்றிரண்டு சம்பவத்தை வைத்து காவல்துறைக்கு வேறொரு கலரில் பெயிண்ட் அடிப்பது சரியில்லை. தொடர்ச்சியாக மரணம் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. புலன் விசாரணை நடத்துவது காவல்துறை கடமை. விசாரணையின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதியம் 01.00 மணிக்கு ராஜசேகருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், மாலை 04.00 மணிக்கு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது விசாரணை கைது ராஜசேகர் இறந்துவிட்டார்" எனத் தெரிவித்தார். 

 

இந்த நிலையில், ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.