ஆயுள் கைதி உள்பட இரண்டு கைதிகள் அடுத்தடுத்த மூன்று நாள்களில் திடீரென்று உயிரிழந்திருப்பது சேலம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜர் நகர் காலனியைச் சேர்ந்தவர் ராம்ராஜ் (27). கடந்த ஜனவரி 1ஆம் தேதி, சிறுமியைக் கடத்திச்சென்று திருமணம் செய்ததாக அவரை காவல்துறையினர், போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
அதையடுத்து ராம்ராஜை, சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். டி.பி. நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சேலம் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஞாயிறன்று (மே 24) அவருக்கு உடல்நிலை திடீரென்று கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதி இறந்தது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அஸ்தம்பட்டி காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த கைதி செல்வம் (42) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
மூன்றே நாளில் இரண்டு கைதிகள் அடுத்தடுத்து உடல்நலப் பிரச்னைகள் காரணமாக உயிரிழந்திருப்பது சிறைத்துறை வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? சிறை கைதிகளிடையே கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளதா? என பல்வேறு சந்தேகங்களை இந்த மரணங்கள் ஏற்படுத்தி உள்ளது.