Skip to main content

பரோல் கைதியை தப்பிக்க விட்ட சிறைக்காவலர் பணியிடை நீக்கம்!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

The prison guard who let the parole prisoner escape was dismissed!

 

பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பிய ஆயுள் கைதியை தப்பிக்க விட்ட, சேலம் சிறை வார்டன் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரி (வயது 44). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 

 

ஜூன் 22- ஆம் தேதி அவருக்கு மூன்று நாள்கள் பரோல் கிடைத்தது. பரோல் விடுப்பு முடிந்து, ஜூன் 25- ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு, சேலம் மத்திய சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும். அன்று மாலை 05.30 மணியளவில், சிறை நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஹரி, சிறிது நேரத்தில் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார். 

 

ஆனால் 06.00 மணிக்கு மேலாகியும் அவர் சிறைக்குத் திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த சிறைக்காவலர்கள், ஹரி பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அந்த எண் வாடகை கார் ஓட்டுநர் ஒருவருடையது என்பது தெரிய வந்தது. கார் ஓட்டுநரோ, ஹரியை சிறை வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றதாக கூறினார்.

 

இதையடுத்து சிறை வாயில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறைக்கு வந்த ஹரியை, வார்டன் ராமகிருஷ்ணன், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றது தெரிய வந்தது. 

 

மத்திய சிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி. மதிவாணன் ஆகியோர் வார்டன் ராமகிருஷ்ணனிடம் நேரில் விசாரணை நடத்தினர். ஆயுள் கைதி ஹரி, பழங்கள் வாங்க வேண்டும் என்று கூறியதாகவும், அதனால் அவரை அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருந்து ஹரி தப்பிச்சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். 

 

இதைக்கேட்டு சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பணி நேரத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக வார்டன் ராமகிருஷ்ணனை சிறைத்துறை எஸ்.பி. உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தலைமறைவான ஹரியை தேடி வருகின்றனர். 

 

தப்பிச் செல்வது நோக்கமாக இருந்தால் கைதி ஹரி ஏன் சிறைக்கு குறித்த நேரத்திற்கு வந்திருக்க வேண்டும்? வார்டன் திட்டமிட்டு அவரை தப்பிக்க வைத்தாரா? என்பது குறித்தும் துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. 

 

அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து ஹரியை அழைத்துச் சென்றது யார்? அவர் எந்த வகையில் தப்பிச்சென்றார்? அல்லது தப்பிச்செல்ல விடப்பட்டாரா? என்பதும் குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது. அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் சம்பவத்தன்று பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.