Skip to main content

திருட்டில் ஈடுபட்ட சிறை நண்பர்கள் - நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

‘Prison friends involved in theft’-re-imprisoned cops

 

திருச்சி மாநகரில் சமீப காலமாக நடைபெறும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருச்சி கே.கே.நகர் பகுதிகளில் கடந்த 14.08.2021 அன்று மதியம், பூட்டியிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இதனிடையே, கே.கே.நகர் பகுதிகளில் இதற்கு முன் நடந்த அனைத்து திருட்டு மற்றும் சமீபத்தில் சிறையிலிருந்து விடுபட்ட குற்றவாளிகள் பட்டியல் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 

 

அதன் அடிப்படையில் தனிப்படையினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் முருகன், அபுதாகீர் என தெரியவந்தது. அதில் முருகன் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும், மற்றொரு நபரான அபுதாகீர், மாத்தூர் காவல் நிலைய பகுதியில் ஒரு கொலை வழக்கில் சிறையிலிருந்தபோது மேற்படி முருகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

 

முருகன் தனக்கு கே.கே.நகர் பகுதியில் பூட்டப்பட்ட வசதியான வீடுகளை அடையாளம் காண்பித்தால் இருவரும் சேர்ந்து கொள்ளையடித்து பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் சிறையிலிருந்து வெளிவந்த முருகன், அபுதாகீர் இருவரும் கே.கே.நகர் பகுதியில் கடந்த ஜுலை மாதம் முதல் மூன்று வழக்குகளில் கொள்ளையடித்த 14 லட்சம் மதிப்புள்ள 48 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ. 25 ஆயிரம் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்திய 2 கடப்பாறை, 1 இருசக்கர வாகனம், ஹார்டு டிஸ்க்கு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.