“கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்” - முதலமைச்சர் 

“Priority for pregnant women” - Chief Minister Monsoon Advisory

மொத்தத்தில் மக்களைக் காக்கவேண்டும். அது ஒன்றே நமது இலக்கு எனபருவமழை ஆயத்தப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம், மழைப் பொழிவு நான்காம் தேதி வரை நீடிக்கும் என்றும் நவம்பர் 1 முதல் மழைப் பொழிவின் அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வடகிழக்குப் பருவமழை தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டார்.இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர்ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், “கனமழையை நாம் எதிர்கொள்ளத்தயாராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நமக்கெல்லாம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், கைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். தாழ்வானபகுதிகளில் இருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி போன்றவையும் செய்து தர வேண்டும். அப்படி வெளியேற்றும் போது முதியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மழைக்காலத்தில் பல அரசுத்துறைகளும் தனித்தனியாக இயங்காமல் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டும். மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு. தொலைபேசியில் வந்தாலும் வாட்ஸாப்பில் வந்தாலும் உடனே குறைகளைச் சரி செய்து கொடுங்கள்” எனக் கூறினார்.

monsoon
இதையும் படியுங்கள்
Subscribe