சேலம் இரும்பாலைக்கு நிலம் கொடுத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
சேலம் இரும்பாலை சிஐடியு தொழிற்சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது. தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சேலம் இரும்பாலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இந்த ஆலையில் நிரந்தர தன்மை வாய்ந்த பணியிடங்களில் ஒப்பந்த முறையில் பணிநியமனம் செய்வதை ரத்து செய்து, நிரந்தர பணியாளர்களை நியமித்திட வேண்டும்.
சுற்றுவட்டார கிராமங்களில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தர வேண்டும். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆலை வளாகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 11, 12ம் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக சித்தையன், பொதுச்செயலாளராக சுரேஷ்குமார், பொருளாளராக பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.