அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான நாளை மறுநாள் (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காக பா.ஜ.க. சார்பில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி 2 நாள் பயணமாகத் தமிழகம் வரும் பிரதமர் மோடி 200 பேரைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 13 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர்கள் என 200 பேரைச் சந்திக்க உள்ளார். நாளை (26.07.2025) தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் நிகழ்ச்சி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் அங்கிருந்து திருச்சி செல்கிறார். அங்குள்ள ஹோட்டலில் இரவு தங்குகிறார்.
அதன் பின்னர் 27ஆம் தேதி காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் திருச்சி சென்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இவ்வாறு அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும்போது அங்கேயே அவரை சந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி நாளை இரவு திருச்சியில் சந்தித்துப் பேச உள்ளார். அதே போன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் பிரதமர் மோடியை நாளை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.