திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற உள்ள 36-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் வருகை தர உள்ளார்.
இந்நிலையில், மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸார் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கருப்பு உடை அணிந்து, கருப்பு நிற பேப்பரில் பட்டம் செய்து "எனது வேலை எங்கே மோடி" என்று எழுதியும், செங்கலில் எய்ம்ஸ் என்று எழுதியும், பெண்கள் கையில் விறகு குச்சிகளையும் வைத்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழிகாட்டுதல் குழு தலைவர் முகமது சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரும் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினருமான கார்த்திக், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், வட்டார வளர்ச்சி தலைவர் மதுரை வீரன், அமீர் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக இன்று காலை 5 மணி அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.