Skip to main content

தந்தையை இழந்த சிறுமி... இரண்டாம் திருமணம் செய்த பூசாரி!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

The priest who married the girl for the second time has been arrested

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு கரோனா நோய் பாதிப்பின் காரணமாக இறந்துபோனார். தனது தாயுடன் வசித்துவந்த அந்தச் சிறுமிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். பரதன்தாங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுதாகரன் (36) என்பவருக்கும் அச்சிறுமிக்கும் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் அடிவாரத்தில் வைத்து திருமணம் நடந்துள்ளது. 

 

சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட சுதாகர், சாமியாடி குறிசொல்லும் பூசாரி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் சுதாகரன், சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட தகவல் மாவட்ட சமூக நலத்துறைக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்ட சமூக நலத்துறை ஆலோசகர்கள் விமலா, பிரியதர்ஷினி ஆகியோர் செஞ்சி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, செஞ்சி சமூகநல அலுவலர் சுமதி, குழந்தைகள் பாதுகாப்பு சட்டப் பணியாளர் சதீஷ், சைல்டு லைன் உறுப்பினர்கள் பொன்னியம்மாள், லட்சுமிபதி ஆகியோர் கொண்ட குழுவினர் அந்தக் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். 

 

இந்தக் குழுவினர் நடத்திய விசாரணையில், 14 வயது சிறுமிக்குத் திருமணம் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின்படி புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவுசெய்தனர். சிறுமியைத் திருமணம் செய்த பூசாரி சுதாகரன், இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அந்தச் சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்துள்ளனர். திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மற்றும் சுதாகரனின் இரு குழந்தைகளையும் மீட்டு விழுப்புரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பூசாரி, சிறுமியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.