Skip to main content

“கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள் தொலைவில் இல்லை!” - பாஜக முருகனுக்கு அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்கம் பதிலடி!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

Priest Training Student  answered to L murugan

 

"நான் ஏன் கருவறைக்குள் நுழைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கேட்பது போன்ற அடிமை மனோபாவம், தமிழகத்தில் இல்லவே இல்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர்கள் அல்லாத 203 மாணவர்கள் தமிழகம் முழுவதும் கோவில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு, கருவறைத்  தீண்டாமை தமிழகத்தில் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!” எனச் சிலிர்க்கிறது, தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.

 

இதற்குக் காரணம் – சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் ‘அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர்கள் அல்லாத 207 மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட, பாரதிய ஜனதா கட்சி போராடுமா? கந்த சஷ்டி கவசத்தினை கருவறையில் பாட,  தமிழ் வழிபாட்டிற்காகப் போராடுவீர்களா?’ என்று கேட்டபோது, “பேராசிரியர் வேலையை நீங்கள் செய்ய முடியுமா? நான் ஏன் கருவறைக்குள் போக வேண்டும்? கடவுள்களை ஆகம விதிகளின்படி வழிபட, பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்கும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு உச்சநீதிமன்றததில் நிலுவையில் இருக்கிறது” என்று கூறிவிட்டு, இது தொடர்பான கேள்விகளை மேலும் கேட்கவிடாமல், தனியாக விவாதத்திற்கு வாருங்கள் என்று சமாளித்தார்.  

 

இந்நிலையில், தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் - “2006ம் ஆண்டு, அன்றைய  திமுக ஆட்சியின்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில், பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து கோவில்களில் அர்ச்சகராக்குவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டு, தமிழ்நாட்டில் 6 சிறப்பு பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் பயிற்சி முடித்த மாணவர்களாகிய  நாங்கள் அர்ச்சகராகும் தகுதி திறமையோடு இருக்கிறோம்.

 

Priest Training Student  answered to L murugan

 

2006ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், இந்த அரசாணையை எதிர்த்து, மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் கடவுளைத் தொட்டு பூஜை செய்தால் தீட்டாகிவிடும் என பொதுமக்கள் சொல்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் நேரடியாகத் தொடர்ந்த வழக்கில், அரசாணைக்கு இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பிலும்,  அரசாணையை ஆதரித்து வாதாடினோம். இதன் இறுதி தீர்ப்பு டிசம்பர் 16, 2015 அன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

 

இத்தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர்கள் அல்லாத எங்களைப் போன்ற மாணவர்கள், அர்ச்சகர்களாக நியமிக்கப்படத் தடையில்லை; ஏனெனில் எந்தக் கோவில் ஆகமத்திலும், பிராமணர்கள்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என்றில்லை என சட்ட வல்லுநர்கள், தமிழ் ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர். ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில், சாதி, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு, அர்ச்சகர் நியமனத்தில் காட்டப்படுவதை ஏற்க இயலாது; குறிப்பிட்ட கோவில்களின் ஆகமங்களுக்கு ஏற்ப அர்ச்சகர் நியமிக்கப்படலாம்; அனைத்துக் கோவில்களின் அர்ச்சகர் நியமனங்களுக்கும், பொதுவான ஒர் அரசாணை என்பதுதான் ஏற்புடையதல்ல..’ என்பதுதான், உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சமாக உள்ளது.

 

தீர்ப்பளித்து  5 ஆண்டுகள் ஓடிவிட்டன. தீர்ப்பிற்குப் பின், அத்திபூத்தது போல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் மாரிச்சாமி மட்டும், மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவில் அர்ச்சகராக 2018ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இன்னமும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார் பாஜக தலைவர் முருகன். அரசியலமைப்புச் சட்டம் நெறிமுறை, கருவறைத் தீண்டாமை ஒழிப்பு, இவையெதுவும் முருகன் உள்ளிட்ட பாஜக, சங் பரிவாரங்களுக்கு  அவசியமில்லை போலும்.  ‘ஆகமம்' எனும் பெயரில், சாதிய சனாதனத்தினை அடைகாக்கும் கூடுகளாக கருவறைகள் நீடிக்கவே,  இவர்கள் விரும்புகின்றனர்.

 

அவர்கள், எந்த 'இந்துக்களின்' நலனுக்காக இருக்கிறார்கள் என்பதனை இதன்மூலம் தெளிவுபடுத்திவிட்டனர். ‘நான் ஏன் கருவறைக்குள் நுழைய வேண்டும்’  என்பதில் நிலவும் அடிமை மனோபாவம்,  இன்றைய தமிழகத்தின் பெருவாரியான ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களிடம் இல்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர்கள் அல்லாத மாணவர்கள்,  தமிழகம் முழுவதும் கோவில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு, கருவறைத் தீண்டாமை தமிழகத்தில் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், அதற்கான போராட்டத்தினை தொடர்கிறோம். அதற்குத் தடையாக வரும் எவற்றையும் கடந்திடுவோம்.” எனச் சூளுரைத்திருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நடிகர் விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்' - சீண்டிய எல்.முருகன்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
MM

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

NN

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)  2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. இச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 Postponement of the program of alternative parties joining the BJP

பா.ஜ.க.வில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணையும் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (26.02.2024) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி இன்று மாலை நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இருப்பினும் நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பா.ஜ.க.வினர் யாரும் வரவில்லை. அதன் பின்னர் மாலை 06.40 மணியளவில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர்.

அதன் பின்னர் கே.பி. ராமலிங்கம் பேசுகையில், “இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பா.ஜ.க.வில் இனைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் கட்சியில் இணைபவர்கள் மோடியை சந்திக்க வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதாலும், பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.